தலைவனை, தீரனை, மாவீரனை, இராவணனை இழித்தும் பழித்தும் பதினாயிரம் பாடல்கள் எழுதினான்; அதன் மூலம் தமிழ் இனத்தின் தன்மானத்திற்கே மாசு தேடினான்; தமிழர் வீரத்திற்குக் கல்லறை தேடினான்; தமிழர் பண்பாட்டிற்கு இழிவு தேடினான்; உண்மைத் தமிழர் என்றென்றைக்கும் தலைகுனிந்து தீரவேண்டிய நிலையைத் தேடினான். அவன் சிறு புலவனாய் இருந்து இந்தச் சிறுமையைத் தேடி இருந்தாலும் பரவாயில்லை! பழியும் சிறிதாய் இருந்திருக்கும்; அவனோ இணையற்ற புலவன். ஆகவே, அவனால் தமிழர் குலத்திற்கு நேர்ந்த இழிவும் இணையற்றதாயிற்று. அந்த இழிவை ஒழித்தது இராவண காவியம். கம்பன், தமிழர் மானத்திற்குத் தளைபூட்டினான். அந்தத் தளையைத் தூள் தூளாய்த் தகர்த்தெறிந்தார் புலவர் குழந்தை. கம்பன் நம் தமிழை ஆரியச் சிறைக்குள் தள்ளினான். சிறைச்சாலை என் செய்யும் என்று பண்பாடிய வண்ணம் புலவர் குழந்தை சிறை நோக்கிச் சென்றார்; இராவண காவியம் என்ற ‘டைனமிட்’டைக் கொண்டு சிறைமதில்களை இடித்துத் தள்ளினார்; உள்ளே புகுந்தார்; தமிழுக்கு விடுதலை தந்தார்; தமிழர் கம்பனால் இழந்த மானத்தை மீட்டுத் தந்தார்; தமிழர்க்கு இன்பந்தந்தார்; அவர்களுடைய குனிந்த தலை நிமிர வழிவகுத்துத் தந்தார்; ழுஏ! தமிழரே வாரீர்! உங்கள் கவியரசன் கம்பன் எங்கள் சூழ்ச்சிக்கு இரையானான் பாரீர்! என்று இறுமாப்புடன் கூறிவந்த ஆரியர்தம் ஆணவம் அடங்க, அவர்கள்தம் ஆர்ப்பாட்டம் குறைய, புத்தம் புதிய இலக்கியத்தைத் தந்தார். எனவேதான், இராவண காவியம் என்ற சொல் கேட்டதும் தமிழர் களி்ப்புக் கடலில் நீந்திடலாயினர். 12ஆம் நூற்றாண்டில் கம்பன் பிறந்தான்; தான்பிறந்த இனத்திற்குத் துரோகம் புரிந்தான்; மாற்றானுக்கு மண்டியிட்டுப் பணிந்தான்; பகைவர் புகழ்பாடி, தென்னிலங்கைவேந்தன்- தமிழ்வீரன் இராவணனுக்கு இழிவு கூறி நின்றான். 20ஆம் நூற்றாண்டில் தோழர் புலவர் குழந்தை வந்தார்; இனமுன்னோன் இராவணனின் உண்மைப் புகழைக் காவியமாக்கித் தந்தார்; அழியாப் புகழ் கொண்டார். இராமகாதை! இராவண காவியம்! இரண்டும் இரு சொற்களல்ல, இரண்டு காவியங்களின் பெயர்கள் மட்டுமல்ல, இருதுருவங்கள். இராமகாதை, ஆரியச் சூழ்ச்சி திராவிட வீரத்தை வென்றது என்பதன் அடையாளச் சின்னம்! இராவண காவியம், தமிழர் விழித்தெழுந்து விட்டனர், ஆரியர் சூழ்ச்சியை அழித் | |
|
|