பக்கம் எண் :


இராவண காவியம் 521

   
        44.  மாயோன் மருகன் மகனேவண் டார்குழலி
            சேயோ னெனும்பெரும்பேர் சென்றொழிந்த தின்றோடுன்
            தாயா ருறவுவந்து தங்கமெங்கே யென்றாலென்
            வாயா லெளியேன் மறுமொழியென் சொல்வேனே.

        45.  கோமகனே செல்வக் குழந்தாய் குறும்பறுக்கும்
            நாமவேற் கையண்ணல் நன்மரபுக் கோர்விளக்கே
            மாமனார் வந்தென் மருமகனெங் கேயென்றால்
            தாமரைவாய் விண்டென்ன சாற்றுவேன் சாவில்லேன்.

        46.  கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
            வேட்டேமேன் மேலும் விரும்புந் தமிழ்வாயா
            பாட்டனார் வந்தெம் பழம்பெயர னெங்கென்று
            கேட்டாலென் னென்று கிளக்குவேன் கேடுடையேன்.

        47.  நந்தா வொளிவிளக்கே நற்றமிழர் சொற்பொருளே
            எந்தாய் குழந்தாய் இணையில்லாப் போரேறே
            அந்தோ பழிகார ஆரியர்கை யம்பினுக்கோ
            மைந்தாயான் பெற்று வளர்த்தேன் மலைபோலே.
 
எழுசீர் விருத்தம்
 
        48.  தனியா யலர்ந்த மலர்வா யெழுந்து
                 தகவே கசிந்த தெளிதேன்
            கனிபா லினைந்து படவே யுயர்ந்து
                 கலைதா விவந்த தமிழர்
            அனைபோ லுவந்து முடிசூ டவிந்த
                 வரசா ளவந்த மகனே
            இனியா ரைநம்பி யுயிர்வாழ் வனுந்த
                 இனியலோ டமைந்த வெளி்யேன்.

        49.  படிமேல் நடந்து விளையா டிமுந்து
                 பசியா கவந்து பரிவாய்
            மடிமீ தமர்ந்து தமிழ்வாய் திறந்து
                 வடிதே னுகர்ந்து மழலை
            நெடிதே மொழிந்து மதிபோல் வளர்ந்து
                 நிலமா ளநின்ற மகனே
            கடிதே சினந்து வடவோ னெறிந்த
                 கணையா லிறந்த தறமோ.
-------------------------------------------------------------------------------------------
        45. குறும்பு - சிற்றரசு. நாமம் - அச்சம். 46. வேட்டல் - விரும்பல். பழம்போன்ற - இனிய.