பக்கம் எண் :


இராவண காவியம் 545

   
         48.   தாயெனுந் தகைய தலைவியவ் வாறு
                   தகவுரை கூறிட இந்த
              மாயிரு ஞாலம் பொதுவற வுயர்த்த
                   மதிக்குடை நீழலி லமர்ந்து
              ஞாயிறு போலத் தமிழக முழுதும்
                   நாவலர் நூல்வழி நடப்ப
              ஆயினும் பரிவா யறநெறி புரந்த
                   அருந்தமி ழண்ணலும் அன்பாய்.

         49.   எனதுயி ரனைய என்னுடன் பிறப்பை
                   இரக்கமென் பதுசிறி தின்றிச்
              சினைசிதைத் தவனில் எனவவா றுனையும்
                   சினைசிதைத் தவளெனச் செய்தே
              எனதுள வெகுளி தணிந்திட வுன்னை
                   எடுத்துவந் தேனிவ ணென்று
              மனமது கவலேல் ஈங்குனை யெடுத்து
                   வந்ததன் காரணங் கேண்மோ.

         50.   என்னுடன் பிறப்பைச் சினைசிதைத் தவனீங்
                   கெய்திடி னிலங்கைமா மகளிர்
              முன்னினி மேற்பெண் கொலைசெயேன் பொறுப்பீர்
                   முடிந்ததை யெனச்சொலச் செய்து
              தன்னுட னுன்னை யனுப்புவல் இலையேல்
                   தண்டமிழ் மறவரை யேவி
              அன்னவன் றன்னைப் பிடித்துவந் துன்னை
                   யனுப்புவே னவனுட னென்றார்.

         51.   பின்னரு மொன்று பேசினா ரென்றன்
                   பிறவியைக் கொன்றவ னுன்பால்
              மன்னிய வன்பும் மனையறப் பண்பும்
                   மானமு முடையவ னானால்
              இன்னிய லுன்னை யடைகுவான் வேண்டி
                   எப்படி யேனுமீங் குறுவான்
              அன்னவ னிலங்கை யடைதரு காறும்
                   அம்மணி யினிதிவ ணிருப்பாய்.
---------------------------------------------------------------------------------------
         49. இல் - மனைவி. 50. தன் என்றது இராமனை. 51. இருப்பாய் என்று பின்னரும் ஒன்று பேசினார்.