21. அழகிய ரெவரு மைம்பாற் ககிற்புகை யூட்ட வில்லை மழலையா டகங்க ளெங்கும் மணப்புகை காட்ட வில்லை கழலணி காலார் பாலுங் காய்ச்சினா ரில்லை மக்கள் விழிபுகை யின்றி யூரில் வெண்புகை யில்லை மாதோ. 22. கைதலை பொருந்தக் கண்கள் காரினைப் பொருந்த யாதும் செய்தலை மறந்து பாவி செயலினை நினைந்து வாயால் வைதலை யயர்ந்து வாழும் வழியினை முனைந்து கொற்றம் எய்தலை யெண்ணி யெண்ணி யிருந்தனர் மனையு ளம்மா. 23. தாரணி முரசி னாணை தட்டியே தட்டி லாத ஊரவர் நிலைமை கண்டுள் ளுடைந்துமே கொடிய பாவி வீரவென் செய்வே னென்னை வெறுத்தன ரிலங்கை மக்கள் யாரினி யாண்டோ வேழைக் கரசுவேண் டாமென் றானே. 24. அவ்வுரை கேட்ட வில்லோ னையநீ யஞ்ச வேண்டா ஒவ்வொரு வருமெண் ணாதூ றுற்றபோ துடன்று சீறி வெவ்வுரை புகல்வ ரந்த வினைமுடிந் ததன்பின் யாரும் தெவ்வரே யெனினு மன்பு செய்குவ ரியல்பி தாமே. 25. ஆதலால் வருந்த வேண்டா ஐயநீ யரச னானால் மூதறி வாள ரான முதுதமிழ் மக்க ளெல்லாம் போதுவர் போந்து நேர்மை புரிகுவர் பின்ன ரெல்லாங் காதல ராவர் வேண்டுங் காரியம் புரிதி யென்றான். 26. என்றலு மிளைய பாவி யேவலர் தம்மை யேவச் சென்றவ ரிறைவ னென்னுந் திருவினை யிழந்து நிற்குங் குன்றென வுயர்ந்த மாடக் கோயிலைக் குறித்த போதிற் கொன்றவோ ருடலைக் கோலங் கொண்டெனக் கோலஞ் செய்தார். 27. முடிபுனை வேளை யீது முறையொடு வருக வென்றே கடிமுர சோய்வி லாதுகாரென முழக்கி னார்கள் அடிமையு மடிமை கொண்டா ரன்றியோர் தமிழ ரேனுங் குடிகொள வில்லை யந்தக் கொடிதவழ் மாடக் கோயில். -------------------------------------------------------------------------------------- 21. மழலை ஆடல் - குழந்தைகள் கொஞ்சி விளையாடல். 23. தட்டு இலாத - தடை, தவறு இல்லாத. 24. ஊறு - இடையூறு. ஊறு உற்றபோது எண்ணாது. | |
|
|