பக்கம் எண் :


60புலவர் குழந்தை

   
     தன் நாட்டினுள் தன் உடன்பாடின்றி வந்ததே தவறாக இருக்க, தன் தங்கையை,
ஒரு குற்றமும் செய்யாத உடன்பிறப்பை உருக்குலைத்துக் கொன்றதற்கு ஒப்பான
செயலைத் திருப்பிச் செய்யாது, அக்கொடியோன் மனைவியை எடுத்துவந்து பாதுகாத்து
வந்தது எங்ஙனம் அறக்கொடுஞ்செயலோ நமக்கு விளங்கவில்லை.

     இனி ஆரிய முனிவர்கள் செய்த கொலைவேள்வியைத் தடுத்த இராவணனது
பராக்கிரமம் கம்பரால் அறக்கொடுஞ் செயலெனச் சித்திரிக்கப்படுகிறது. கொலை
வேள்வியைத் தடுத்த, துடிக்கத் துடிக்க உயிர்களைக் கொல்வதைத் தடுத்த இரக்கமுள்ள
ஒருவன், கொல்வது குற்றமெனக் கூறிய அருட்குணமுள்ள ஒருவன் கொடும் பாவி!
அக்கொலை வேள்வி செய்யத் துணைசெய்த ஒருவன் அறங்காத்தோன்! இவ்வறநெறியைக்
கம்பர் எங்குக் கற்றாரோ நாமறியோம். ழுஅவிசொரிந் தாயிரம் வேட்டலினும் ஒன்றன்
உயிர்செகுத்துண்ணாமை நன்றுழு என்னும் வள்ளுவர் வாய்மொழியைக் கம்பர் அறிந்திலர்
போலும்! கொலை மறுத்த கொன்றுண்ணாக் குணக் குன்றை அறக்கொடியோன் என்ற
கம்பரின் போக்கு நமக்கு விளங்கவில்லை.

     ஆரியர் இந்நாட்டிற்கு வருமுன் தமிழரிடைக் குடிப்பழக்கம் இல்லை. ஆரியர்
சோமக்கொடிச் சாறு முதலியவற்றிலிருந்து கள் உண்டாக்கிக் குடித்து வந்தனர். (சாராயம்
முதலிய மதுவகைகளும் கள்ளெனவேபடும்) இராவணன் முதலிய தமிழர் தலைவர்கள்
அதைத் தடுத்து வந்தனர். ஆரியர்க்குச் ‘சுரர்’ என்னும் பெயர் கள் உண்டதனால்
ஏற்பட்ட பெயரேயாகும். சுரர் - தேவர். பூசுரர் - ஆரியர். இராவணன் முதலிய தமிழர்
குடியாதவர் - அசுரர். சுரர் - கள். சுரர் - கள்ளுண்போர் - குடியர். அசுரர் -
குடியாதவர். அறிவை மயக்கும் கள்ளுண்ணாதவன், குடிப்பதைத் தடுத்தவன்
அறக்கொடியோன். குடிக்க உதவியவன் அறம் வளர்த்தோன்! இது, கல்வியிற் பெரிய
கம்பர் கண்ட அறம் போலும்! குடிப்பழக்கம் இல்லாத நாட்டில் திருட்டுத்தனமாகக்
குடிப்பது குற்றம் என்பதைக் கம்பர் அறியார் போலும்!

     அயல் நாடர்களாகிய அவ்வாரியர்கள் இராவணனுடைய நாட்டுக்குள் அவன்
உடன்பாடின்றி வந்தது முதல் குற்றம்; அவ்வாறு வந்ததோடு, நாட்டுமக்கள் தடுத்துங்
கேளாமல் அந்நாட்டு விலங்குகளைக் கொன்று தின்றது இரண்டாவது குற்றம்; அந்நாட்டு
மக்களின் கால்நடைகளை - ஆடு மாடுகளை - உடைமைகளை - கண்டுங் காணாதும்
திருட்டுத்தனமாகக் கொன்றுதின்றது மூன்றாவது குற்றம்; அரசன் ஆணையையும்
புறக்கணித்து அக்கொலைத் தொழில், புலைத்தொழில் செய்தது நான்காவது