கம்பரைக் காட்டினும் கடைப்பட்ட முறையில் காய்மொழி கூறிக் கடிவதும், தமிழர் குலப் பகைவனான ஆரியராமனைப் போற்றிப் புகழ்வதோடமையாது, கோயில்கட்டிக் கும்பிட்டு வருவதுமான தமிழ் மக்களது அறியாமையைப் போக்கி அறிவு கொளுத்தவேயாகும். பழந்தமிழ் அரச குடும்பத்திற் பிறந்து ஒரு நாட்டை ஆண்டு வந்த தமிழரசியாகிய காமவல்லியை (சூர்ப்பநகை), கொடுங் குணமும் கடுஞ்செயலும் காமப்பித்துங்கொண்ட கண்கொண்டு பார்க்கமுடியாத அழகில்லாத கொடிய அரக்கி எனவும், அவளை மூக்குமுலை அறுத்துக் கொன்றது தகும் எனவும், மூக்குமுலையறுபட்ட அவள் அவ்வலங் கோலத்துடனே ஆயிரங்கல் தொலைவிலுள்ள வடபகுதியிலிருந்து இலங்கை சென்று, மானவெட்கமின்றித் தன் அண்ணனிடம் சீதை சிறப்புக் கூறி, உனக்காக அவளை எடுத்துக் கொண்டு பெயரும்போது இராமன் தம்பி இவ்வாறு செய்துவிட்டனன் எனக் கூறியதாகவும், அது கேட்ட அரக்கனாகிய இராவணன் தன் தங்கையின் மானக் கேட்டைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாதவனாய்ச் சீதையின் பால் காதல் கொண்டு சென்று சீதையைச் சிறையெடுத்து வந்ததாகவும் கூறும் அடாத அம்பெரும்பழியினை அப்படியே நம்பி, தங்கள் பழம் பெருந்தலைவனையும், தலைவியையும் நாத்தழும் பேறப் பழித்துவரும் தமிழ்மக்களுக்கு உண்மையை உணர்த்தி இனவுணர்ச்சியுண்டாக்கி, அத்தமிழர் தலைவர்கள்மீது வேண்டுமென்றே சுமத்தப்பட்டுள்ள அடாப் பெரும்பழியைத் துடைப்பதற்கேயாகும். தன்னாட்டில் தனித்துலவிய ஒரு தமிழ்த் தலைவியைக் (அரசியை) கண்டு காமுற்று, அவள் மறுத்துங் கேளாது வற்புறுத்தவே மீறிச் சென்ற அத்தமிழ்த் தையலைத் தன் தம்பியைக் கொண்டு மூக்குமுலை யறுத்துக் கொன்ற இராமனது அறக் கொடுஞ்செயலை உணராது தமிழ் மக்கள் கம்பன் சொல்லில் மயங்கி, இவ்வளவு காலமாய் அக்கொடுங்கொலை இராமனைக் கடவுளெனக் கொண்டு வணங்கி வந்த அத்தீச் செயலின் கழுவாயாக, இராவணன் அரக்கன் அல்லன், தமிழர் தலைவன், தன்மான முடையவன்; தமிழர்க்காகத் தமிழர் வாழ்வுக்காகத் தனிக்களத் தொருவனாய் உயிர்விட்ட தகைமிகு செம்மல்; அன்னான் தங்கையாகிய காமவல்லி தாபதநோன்பு நோற்றிருந்த (கைம்மை) தகைமிகு தமிழ்மகள் என்பதைத் தமிழ்மக்கள் உணர்ந்து தம் தவற்றை - தப்பெண்ணத்தை திருத்திக் கொள்வதற்கே யாகும். கம்பர் கூற்றுப்படியே, தன்மீது காதல் கொண்ட ஒருத்தி அரக்கியாக இருந்தாலுங்கூடத் தன் சொல்வன்மையால் அவள் | |
|
|