பக்கம் எண் :


68புலவர் குழந்தை

   
     புகழும் தமிழர்களின் மயக்க அறிவைப் போக்கி, கோடரிக் காம்பாகிய
அக்கொடியோனாற்றான் தமிழர் ஆரியர்க்கடிமைப் படலாயினர்; தமிழினம் சீர்குலைந்தது;
தமிழ்ப்பண்பாடு கெட்டது; தமிழர் வாழ்வு சரிந்தது; தமிழர் சூத்திரப் பட்டம் பெற்றுத்
தாழ்த்தப்பட்டவராயினர்; அண்டிப்பிழைக்க வந்த ஆரியர் அடிகள் (சாமி) ஆக
உயர்ந்தனர்; தொழுங்குலமாயினர்; தமிழரின் தலைவர்களாயினர் என்னும் உண்மையறிவை
உண்டாக்கித் தமிழ்மக்களின் தாழ்வைப் போக்குவதற்கே யாகும்.

     தங்கையை உருக்குலைத்துக் கொன்ற கொடியனை அக்காட்டிற் சென்று
பொருதழிக்காது, ‘வெட்சி நிரைகவர்தல்’ என்னும் புறப்பொருளிலக்கணப்படி, பகைவர்தம்
ஆடுமாடுகளையும், மனைவி மக்கள் போன்ற இ்ன்றியமையாப் பொருள்களையும் கவர்ந்து
வந்து பாதுகாத்து, அப்பகைவர் தேடிவரின் நல்லறிவு புகட்டியனுப்புதலோ, பொருது
வெல்லுதலோ செய்யும் தமிழர் போர்முறைப்படி இராவணன் சீதையை எடுத்து வந்து
இலங்கையில் வைத்துப் பாதுகாத்து வந்தானேயன்றி, அவள்மீது காதல் கொண்டு எடுத்து
வரவுமில்லை, அவளை வற்புறுத்தவு மில்லை. அங்ஙனம் செய்ய எண்ணியிருந்தால்
அவனுக்கு அது அரியதுமன்று. வேண்டுமென்றே அவன்மீது பிற்காலத் தமிழர்க்குக்
கெட்ட எண்ணம் உண்டாகும் பொருட்டு அவளைக் கற்பழிக்க வலுவந்தம் செய்ததாக
எழுதி வைத்தனர் ஆரிய வான்மீகியார்; தமிழ்க் கம்பரோ, அதைத் தம் கவித்திறத்தால்
தமிழ்மக்கள் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதியும்படி செய்து, ஆழ்வார்ப்பட்டமும்,
கல்வியிற் பெரியவர் கம்பர் என்ற பட்டமும் பெற்றுவிட்டனர். இவ்வுண்மையறியாது,
ஒருதாரக் கொள்கையுடைய இராவணனை, உலக மாதாவாகிய சீதா பிராட்டியாரைக்
கற்பழிக்க வலுவந்தம் செய்த கயவன், காமுகன்; திருமகளை இராமபிரானிடத்திலிருந்து
பிரித்தெடுத்துவந்த கொடியவன் என்றெல்லாம் தூற்றித் திரியும் தமிழர்க்கு
உண்மையறிவுறுத்தவே யாகும்; இராவணன் ஒருதாரக் கொள்கை - ‘கற்பென்னுந்
திண்மை’ யுடையவன் என்பது, அவன் பொருது களத்தில் இறந்ததும், கோப்பெருந்
தேவியான வண்டார்குழலி (மண்டோதரி) உடனுயிர் நீத்தமையே சான்று பகரும்.
இவ்வளவு நாளாய்ப் பழித்தது போகட்டும். இனியாவது உத்தமனாகிய இராவணனைப்
பழியாதிருக்கும்படி செய்வதற்கேயாகும்.

     இராமன், இராவணனை நேரிடையாக எதிர்த்து வெல்லவில்லை. பீடணன்
உளவாளியாக இருந்தான். நீலன் முதலிய நான்கு பெரும் படைத்தலைவர்கள் பெரும்
படையுடன் சென்று இராமனுடன் சேர்ந்து கொண்டனர். இராவணனை வெல்லும்