ணனை வெல்லவில்லை. அக்கோடரிக் காம்புகளின் இரண்டக உளவால் இராமன் அடைந்த வெற்றியை உண்மையான வெற்றியெனக் கொண்டு இராமனைப் போற்றிப் புகழும் தமிழர்களின் திரிபுணர்ச்சியைப் போக்கவும், ‘ஆரியர் வென்றார் தமிழர் தோற்றார்’ என்னும் அடாப் பழிமொழியை அகற்றவுமே இராவண காவியம் செய்யப்பட்டது. பெயரைக் கேட்கினும் ஆரியர் அஞ்சி நடுங்கிய ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை; இமயத்தையுங் கடந்து சென்ற கரிகாலன் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை; தமிழைப் பழித்த வடவர் தலையில் இமயக்கல்லேற்றி வந்த செங்குட்டுவன் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. தமிழ்நாட்டில், தமிழர்களால், ஆனால், கம்பராமாயணத்தால் ஏற்பட்ட ஆரியமோகத்தால், ஆரியராமன் பிறந்த நாளை, ‘ராமநவமி’ எனக் கொண்டாடி வருகின்றனர் நற்றமிழ் மக்கள். அந்த ராமநவமி நாளில் - ராமலீலாக் கொண்டாட்டத்தில் - தமிழர் மாபெருந்தலைவனான இராவணன் உருவத்தைத் தீயிட்டெரிக்கும் வடவர் கொடுஞ்செயலைக் கண்டு மகிழும் தமிழர்களின் அறியாமையைப் போக்கவே இராவண காவியஞ் செய்யப்பட்டது. ‘ஆடித் திங்களில் இராவணன் பட்டதும்’ எனக் கூறிக் கொண்டு, பகைவன் ஒழிந்த நாளைக் கொண்டாடுவதுபோல, ஆடி முதல் நாளில் இராவணன் தலைசுடுகிறோம் என, குடுமியைப் போக்கி, மஞ்சப்பூசி, அதன் கண்ணில் ஒரு பச்சைக் கோலைக் குத்தித் தேங்காய் சுடுவதும், ஆடிப் பதினெட்டன்று ஆற்றில் குளிப்பதும் களிப்பதும் ஆகிய தமிழ்மக்களின் அறியாமையைப் போக்குவதற்கே இராவண காவியஞ் செய்யப்பட்டது. தமிழர் பண்பாட்டைப் போக்கித் தமிழ் மக்களை ஆரிய நாகரிகத்திற்கு அடிமையாக்கி, ஆரிய ஆதிக்கத்தைத் தமிழ்நாட்டில் நிலைபெறச் செய்து, ஆரியர் உயர்மக்களாகவும், தமிழர் தாழ் மக்களாகவும் வாழும்படி செய்த வடவாரிய ராமன் பிறந்தநாளை இவ்வளவு நாளாய்க் கொண்டாடி வந்த இழிவின் கழுவாயாக ஆண்டுதோறும் ஆடி முதற்கிழமையில் இராவணன் திருநாள் கொண்டாடவும், இராவணன் பெருமையைத் தமிழ்மக்கள் அறியும்படி செய்யவும், பழையபடி தமிழ்ப் பண்பாடு தழைத் தோங்கும்படி செய்யவுமே இராவண காவியஞ் செய்யப்பட்டது. ழுஇனத்தின் பெயரால் ஆரியர் - திராவிடர் என்று பிரித்துப் பேசி வேற்றுமையை வளர்ப்பது, சமூக ஒற்றுமையைக் குலைப்பது நாகரிக மற்ற செயல். தமிழ்மொழி பேசுபவர்களை இரு | |
|
|