தம் ழுயாப்பதிகாரம்ழு என்னும் நூலிலுள்ள ‘கவியரங்கம்’ என்னும் பகுதியும், ழுதொடையதிகாரம்ழு என்னும் நூலும் இவரது இவ்வுளக்கோளைத் தெள்ளிதின் விளங்கும் சான்றுகளாக மிளிர்கின்றன. ‘தொடையதிகாரம்’ என்னும் நூலில் - கும்மி, ஒப்பாரி, உடுக்கைப் பாட்டு முதலிய எல்லாவகையான சிந்துகளுக்கும் இலக்கணம் எழுதி, இளங்கவிஞர்களுக்கு இவர் சிறந்த வழிகாட்டியாக விளங்குகின்றனர். இன்று தமிழகத்தில் செய்யுள் இலக்கணத்திற்குச் சீரிய சான்றாக விளங்குகின்றனர் புலவர் குழந்தை அவர்கள். தமிழ்ச் செய்யுள் மரபு சிதையாமல் இருக்க வேண்டும் என்னும் நன்னோக்குடைய இவர், யார் எத்தகைய தப்புந் தவறுமான - பாட்டல்லாப் பாட்டுக்கள் எழுதிக் கொண்டு வந்தாலும் அவர்களை அன்போடு வரவேற்று, அக்கவிகளைத் திருத்தமுறத் திருத்தித் தருவதை இவர் தம் தமிழ்த் தொண்டாகக் கொண்டுள்ளார். இராமலிங்க வள்ளலாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவ்வடிகளாரின் ‘திருவருட்பா’ என்னும் நூலின் புதிய பதிப்பொன்று வெளியிட முனைந்துள்ள, வடலூர் வள்ளலார் மடத்தைச் சார்ந்த ஒரு பெரியவர், அப் பாக்களுட் பல பெயர் தெரியாமலும், ஒழுங்காகச் சீர்பிரிக்கப்படாமலும், யாப்பமைதியில்லாதவைபோலப் பதிக்கப்பட்டும் தவறாக எண்ணிடப்பட்டும் உள்ளமையால், அப் பாக்களைச் சீர்செய்து செல்ல 29-8-71 அன்று புலவர் குழந்தை அவர்களிடம் வந்தபோது, இவர் அப் பெரியவரை அன்புடன் வரவேற்று, அப் பாக்களுக்குரிய பெயர்களைக் குறித்து, ஒழுங்கான முறையில் சீர்களைப் பிரித்து யாப்பமைதியுறத் திருத்தம் செய்து, சரியான எண்ணி்ட்டுக் கொடுத்தனர். இவ்வாறே, பலர் தாம் எழுதிய பாக்களை இவர்பால் கொண்டு வந்து காட்டித் திருத்திக்கொள்வதும், ஐயப்பாடுகளை நீக்கிக் கொள்வதும் எப்போதும் நடைபெறும் செயல்களாக உள்ளன. தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலப்பதையும், தனித்தமிழெனத் தமிழின் இனிமைப் பண்புக்கு மாறாக மிகக் கடுஞ்சொல் ஆக்குவதையும் இவர் விரும்புவதில்லை. காங்கிரசு ஆட்சியாளரால் தடை செய்யப்பட்ட இவர்தம் ‘இராவண காவியம்’ தமிழக அரசினால், தமிழ்வாழத் தாம் வாழும் தமிழக முதல்வர் டாக்டர், கலைஞர் தமிழவேள் கருணாநிதி அவர்களால் 17-5-71இல் தடை நீக்கப்பட்டது. அது கண்ட தமிழகமே அகமிக மகிழ்ந்து தமிழக அரசை, டாக்டர், கலைஞர் தமிழவேள் அவர்களை மனமார வாழ்த்தியது; புலவர் | |
|
|