உற்சவத் திருமேனி சந்நிதி உள்ளது. அழகான முன்மண்டபம் கல்லால் ஆனது. வலப்பால் குணாலய விநாயகர் சந்நிதி. நேரே மூலவர் சந்நிதி. எதிரில் நந்தி, பலிபீடம். கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது. இறைவன் - ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், படம்பக்கநாதர், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர் இறைவி - திரிபுரசுந்தரி, வடிவுடையம்மை, வடிவுடை மாணிக்கம். தலமரம் - மகிழ மரம் தீர்த்தம் - பிரம தீர்த்தம். மூவர் பாடல் பெற்ற தலம். மூலவர் சுயம்பு. நாக வடிவில் அமைந்துள்ள சிவலிங்கத் திருமேனி, சிவலிங்கமும், ஆவுடையாரும் சதுர வடிவில் அமைந்துள்ளன. சதுரவடிவமான கவசம் சுவாமிக்குச் சார்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் மட்டும் இக்கவசம் அகற்றப்பட்டு புனுகுசட்டம், சவ்வாது, சாம்பிராணித் தைலம் ஆகியவை மட்டுமே சார்த்தப்படுகின்றது. இந்நாள் முதலாக மூன்று நாள்களுக்கு மட்டுமே சுவாமி, கவசமில்லாதிருப்பார். மீண்டும் சார்த்தப்பட்டு ஆண்டு முழுவதும் சுவாமி கவசத்துடனேயே காட்சியளிக்கிறார். பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்குத்தான் நடைபெறுகிறது. விசாலமான உள்ளிடம் கொண்ட கருவறை, ஒற்றியூருடைய ‘கோ’வின் தரிசனம் உள்ளத்திற்கு நிறைவைத் தருகிறது. மூலவர் பிராகாரத்தில் கலிய நாயனார், அறுபத்துமூவர், தலவிநாயகர் சந்நிதிகள் உள்ளன. அடுத்து ஆதிசங்கரர் சந்நிதி உள்ளது. பீடத்தில் நான்கு சிஷ்யர்களின் உருவங்கள் உள்ளன. அடுத்து ஏகாதச ருத்ரலிங்கம் உளது. பக்கத்தில் முருகன் சந்நிதி ; அடுத்துள்ளது, மிக்க புகழ்பெற்ற ‘வட்டப்பாறை அம்மன்’ (காளி) சந்நிதி. இந்த அம்மன் ஒரு காலத்தில் மிக உக்கிரத்துடன் விளங்கி, பலிகளைக் கொண்டதாகவும்; ஸ்ரீ ஆதிசங்கரர் இங்கு வந்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்துச் சாந்தப்படுத்தியதாகவும் வரலாறு சொல்லப்படுகிறது. அடுத்து “திருப்தீஸ்வரர்” சந்நிதி உள்ளது. இங்குக் கல்லில் சிவலிங்க வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. சந்திரசேகரர் சந்நிதி அடுத்து உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், மகாவிஷ்ணுவும், பிரமனும், துர்க்கையும் உள்ளனர். வள்ளற் |