தீர்த்தம் - கல்யாண தீர்த்தம் சுந்தரர் பாடல் பெற்ற பதி. நந்தி கிழக்கு நோக்கியுள்ளது. (மேற்குறித்த வரலாறு காரணமாக) ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரம் தெற்கு நோக்கியது. பக்கத்தில் தீர்த்தக்குளம் உள்ளது. குளக்கரையிலிருந்து பார்த்தால் புழலேரி தெரிகின்றது. ராஜகோபுரத்திற்கு எதிரில் சந்நிதி வீதியில் பதினாறுகால் மண்டபமும் பக்கத்தில் வசந்த மண்டபமும் உள்ளன. ராஜகோபுரத்தில் துவார பாலகர்கள் உள்ளனர். நுழையும்போது எதிரில் பிரசன்ன விநாயகர் தரிசனம். அவருக்குப் பின்னால் மதில்மீது தல வரலாற்றுச் சிற்பம் - யானைமீதிருந்து மன்னன் முல்லைக்கொடியை வெட்டுவது சிவலிங்கம் - தன் கழுத்தை அரிவது-காட்சி தருவது- சுதையால் அமைக்கப்பட்டுள்ளது. வலமாக வரும்போது கல்யாண மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தினுள் அம்பாள் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும், சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளன. விசாலமான வெளிப்பிராகாரம், வில்வமரம் உள்ளது. பைரவர் சந்நிதி உள்ளது. செப்புக் கவசமிட்ட கொடி மரம். நந்தி (தொண்டைமானுக்குதவும் நிலையில்) கிழக்கு நோக்கி உள்ளது. உள் நுழைந்தால் இடப்பால் சூரியன் திருவுருவம். மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கியது ; அற்புதமான சுயம்பு மூர்த்தி, உயரமான லிங்கம். சதுரபீட ஆவுடையார், மேற்புறம் வெட்டுப்பட்டுள்ளது. எப்போதும் சந்தனம் சார்த்தப்பட்டிருக்கும், ஆதலால் அபிஷேகங்கள் சிரசில் கிடையாது. ஆவுடையாருக்குத் தான், வருடத்திற்கொருமுறை - சித்திரை சதயத்தில் சந்தனக் காப்பு களையப்பட்டு மீண்டும் சார்த்தப் படுகின்றது. அது அடுத்த சித்திரை சதயம் வரை அப்படியே சுவாமிமீதிருக்கும். சுவாமிக்கு, வெந்நீர் அபிஷேகம். அபிஷேகக் காலங்களில் மேன்மேலும் சந்தனம் சார்த்தப்படும். ஆனால் களைவதில்லை. களைந்து சார்த்துவது மேற்குறித்த ஒருநாளில் மட்டுமே. இதனால் சுவாமிமீது எப்போதும் சந்தனக்காப்பு இருந்து கொண்டேயிருக்கும். மூலவர் முன்னால் இரு எருக்கந்தூண்கள் உள்ளன. பூண்கள் இடப்பட்டுள்ளன. சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. சுவாமிக்கு முன்பு வெளியில் துவாரபாலகர்கள், தொண்டைமான், நீலகண்ட சிவாசாரியார், மகாவிஷ்ணு ஸ்ரீதேவி பூதேவி ஆகிய |