உள்ளது. விநாயகர், சந்நிதியும், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் சந்நிதியும் அடுத்து உள்ளன. அடுத்த தரிசனம் பைரவர். கருவறை அகழி அமைப்புடையது. நல்ல கற்றளி. மூலவர் சந்நிதிக்கு இருபுறமும் விநாயகரும் முருகப் பெருமானும் காட்சியளிக்கின்றனர். உள்ளே நுழைந்ததும் கருவறையுள் நேரே அம்பாள் (தெற்கு நோக்கி) காட்சி தருகின்றாள். நின்ற திருக்கோலம். சுவாமி கிழக்கு நோக்கிய தரிசனம். மூலவர் - சுயம்பு - மரகதலிங்கம் (பச்சைக்கல்). சிவலிங்கத் திருமேனியில், தீபாராதனை செய்யும்போது அவ்வொளி பிரகாசமாகத் தெரிகின்றது. அற்புதமான அருமையான மரகதலிங்கத் தரிசனம். சதுரபீட ஆவூடையார். இத்தலத்தில் சிவராத்திரி மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. அந்நாளில் நான்கு சாம வழிபாடுகளும் முறையாக நடைபெறுகின்றன. திரளானோர் வந்து தரிசிக்கின்றனர் : இதுதவிர பிரதோஷம் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. பெருவிழா இல்லை. சுவாமி அம்பாள் விமானங்கள், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழா பணிகளுள் சேர்க்கப்பட்டுத் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. திருக்கழுக்குன்றம் அ/மி. வேதகிரீஸ்வரர் தேவஸ்தானத்துடன் இக்கோயில் சேர்க்கப்பட்டுள்ளது. “கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங் காதலர் தீதிலர் கனன் மழுவாளர் வானமு நிலமையுமிருமையு மானார் வணங்கவுமிணங்கவும் வாழ்த்தவும் படுவார் நானமும் புகையொளி விரையொடு கமழ நளிர் பொழில் இள மஞ்ஞை மன்னிய பாங்கர் ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுர(ம்) மேவிய இவர் வணமென்னே” (சம்பந்தர்) (இப்பதிகம் முழுவதிலும் சுவாமியின் (மரகதலிங்கத்தின்) வண்ணம் (அழகு) புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.) |