32. திருஇரும்பை மாகாளம். இரும்பை | தொண்டை நாட்டுத் தலம். மக்கள் வழக்கில் இரும்பை என்று வழங்குகிறது. திண்டிவனம் - பாண்டிச்சேரி (வழி) கிளியனூர் - நெடுஞ்சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்ரோடினைத் தாண்டி மேலும் சிறிது தூரம் சென்றால் “இரும்பை” என்ற பெயர் தாங்கிய கைகாட்டி உள்ளது. அது காட்டும் கிளைப்பாதையில் 2 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. மகாளர் வழிபட்ட தலம். இறைவன் - மகாளேஸ்வரர், மாகாளநாதர். இறைவி - மதுரசுந்தரநாயகி, குயில்மொழியம்மை. தலமரம் - புன்னை (இப்போது இல்லை). தீர்த்தம் - மாகாள தீர்த்தம் - கோயிலுக்குப் பக்கத்திலுள்ளது. சம்பந்தர் பாடல் பெற்றது. மிகப் பழமையான கோயில் - கிலமாகிவுள்ளது - ராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. வாயில் தெற்கு நோக்கியுள்ளது. விசாலமான வெளிப்பிராகாரம். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், துர்க்கை ஆகியோர் உளர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. எதிரில் நவக்கிரக சந்நிதி உள்ளது. பிராகாரத்தில் விநாயகர், ஆறுமுகர் சந்நிதிகள் இருக்கின்றன. மூலவருக்கு நேர் பின்னால் ஆறுமுகர் சந்நிதி உள்ளது. முகப்பு வாயிலுள் நுழைந்ததும் நேரே அம்பாள் சந்நிதி, இடப்பால் சுவாமி சந்நிதி. சந்நிதியினுள் நடராசர், சிவகாமி முதலிய திருமேனிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மூலவர் - சிவலிங்கத் திருமேனி - கிழக்கு நோக்கிய சந்நிதி. இச்சிவலிங்கத்தின் மேற்புறம் மூன்று பிளவுகளாக வெடித்துள்ளது. இவற்றில் ஒரு பிளவு வெளியில் விழுந்து விட்டதால் அந்த இடம் வழித்தெடுத்தாற் போலவுள்ளது. இவ்வாறு வெடித்திருப்பது பற்றிச் சொல்லப்படும் செவி வழி வரலாறு வருமாறு :- குலோத்துங்க சோழன் ஆண்ட காலம், |