கோயிலின் வெளிச் சுற்றில் கொன்றை மரம் - தலமரம் தழைத்து விளங்குகின்றது. இத்தலத்திற்குப் பக்கத்தில் உள்ள ஆலப்பாக்கத்தில் இருந்து ‘காகபுஜண்டரிஷி’ இறைவனை வழிபட்டதாகச் சொல்கின்றனர். பிற்காலத்தில், தொண்டை மாநத்தத்தைச் சேர்ந்த மு.துரைசாமி ரெட்டியார் என்பவர் கோயிலில் ஆராதனைக்காக, வீடுகளை விட்டு அதன் வருமானத்தில் ஆராதனை நடத்துமாறு உயில் சாசனம் எழுதி அதை 26-8- 1921-ல் ஆவணக் காப்பகத்தில் பதிவு செய்துள்ள கல்வெட்டு ஒன்று கோயிலில் உள்ளது. பங்குனி உத்திரப் பெருவிழா 10 நாள்களுக்கு நடைபெறுகிறது. நாடொறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. பக்கத்தில் உள்ள திருமுறைத் தலம் திருத்தினைநகர் (தீர்த்தனகிரி) ஆகும். சோழர், பாண்டியர் காலக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு நிலம் விட்ட செய்தியையும் ; தொண்டைமாநல்லூரைக் கோயிலுக்குத் தானமாக அளித்த செய்திகளையும் தெரிவிக்கின்றன. “நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடை மேன்மதியம் ஏற்றமாக வைத்துகந்த காரணம் என்னை கொலாம் ஊற்றமிக்க காலன் தன்னையொல்க உதைத்தருளித் தோற்றம் ஈறும் ஆகி நின்றாய் சோபுர (ம்) மேயவனே.” (சம்பந்தர்) (சுந்தரரின் ‘திருவிடையாறு’ தலப்பதிகத்தில் - ஊர்த்தொகையில் இத்தலம் குறிக்கப்படுகிறது.) அப்பாடல் :- “சுற்றுமூர் சுழியல் திருச்சோபுரம் தொண்டர் ஒற்றுமூர் ஒற்றியூர் திருவூறல் ஒழியாப் பெற்றமேறி பெண்பாதியிடம் பெண்ணைத் தெண்ணீர் எற்றுமூர் எய்த மானிடையாறிடை மருதே.” -“தீங்குறுமொன் னார்புரத்தை வெண்ணகைத்தீ யாலழித்தா யென்றுதொழ சேர்புரத்தின் வாழ் ஞானதீவகமே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. மங்களபுரீஸ்வரர் திருக்கோயில் திருச்சோபுரம் - தியாகவல்லி அஞ்சல் - 608 801. கடலூர் வட்டம் - கடலூர் மாவட்டம். |