3. கடலூர் - பண்ருட்டி. கடலூர் - நடு வீரப்பட்டி (வழி) திருவகீந்திபுரம் - செல்லும் பேருந்துகளில் ஏறி, திருமாணிகுழி பஸ் நிறுத்தத்தில் இறங்கி, 1 கி.மீ. நடந்தும் ஊரையடையலாம். சோழர்காலக் கட்டமைப்புடைய கோயில். இத்தலம் தேவாரப் பாடல்களில் “உதவிமாணிகுழி” என்று குறிக்கப்படுகின்றது. இதனால் ‘உதவி’ என்பது ஊர்ப் பெயராக இருந்து, காலப்போக்கில் ‘மாணிகுழி’ என்னும் கோயிற் பெயரே ஊர்க்குப் பெயராகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. இதற்கேற்ப தலபுராணத்தில் வரும் செய்தி வருமாறு :- “வடநாட்டு வணிகன் அத்ரி என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட, இறைவன் அவ்வணிகனைத் திருடர்களிடமிருந்து காத்து உதவி புரிந்தார். இதனால் இத்தலம், ‘உதவி’ என்றும் இறைவன் ‘உதவிநாயகர்’ இறைவி ‘உதவிநாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். இதற்கு மேலும் சான்றாகக் கல்வெட்டிலும் இத்தலம் ‘உதவி’ என்றே குறிக்கப் பெறுகின்றது. திருமால் பிரம்மசாரியாக வந்து மாவலிபால் மூன்றடி மண் கேட்டு அவனையழித்த பழிதீர இங்கு வந்து வழிபட்டாராதலின் இக்கோயில் ‘மாணிகுழி’ என்று பெயர் பெற்றது. (மாணி - பிரம்மசாரி) : கோயிலுக்கு எதிரில் உள்ள மலை, செம்மலையாகக் காட்சி தருகிறது. இத்தலத்திற்கு வாமனபுரி, இந்திரலோகம், பீமசங்கர க்ஷேத்திரம் என்பன வேறு பெயர்கள். இறைவன் - வாமனபுரீஸ்வரர், உதவிநாயகர், மாணிக்கவரதர். இறைவி - அம்புஜாட்சி, உதவிநாயகி, மாணிக்கவல்லி. தலமரம் - கொன்றை. தீர்த்தம் - சுவேத தீர்த்தம், கெடிலம். கிழக்கு நோக்கிய இத்திருக்கோயில். சம்பந்தர் பாடல் பெற்றது. (பெரிய புராணத்தில் சுந்தரர்; கெடிலநதியில் நீராடித் திருமாணிகுழியைத் தரி சித்ததாகக் குறிப்பிருந்தும் அப்பெருமான் பாடிய பதிகம் கிடைத்திலது.) ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. சுவாமி அம்பாள் விமானங்கள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திருப்பணித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுத் திருப்பணிகள் |