கூடியுள்ள ஞானசம்பந்தர் முதலிய திருமேனிகள் கண்டு களித்துத் தொழத்தக்கன. அடுத்து நால்வரும் - தொடர்ந்து அறுபத்துமூவர் சந்நிதி - நாயன்மார்கள் பெயர், குருபூசை நாள் நட்சத்திரம் முதலியன எழுதப்பட்டு அழகாகவுள்ளன. அடுத்து மகாகணபதி, சுப்பிரமணியர், ரணவிமோசனர், மகாலட்சுமி சந்நிதிகளும், நடராசசபையும், பைரவர், சட்டநாதர், சூரியன் சந்நிதிகளும் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி (வேலைப்பாடமைந்தது), இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சுவாமி சந்நிதி வாயிலில் மேற்புறம் வண்ணச் சுதையில் சம்பந்தர் ஐக்கியமான காட்சி உள்ளது. வாயில் கடந்தால் நேரே மூலவர் தரிசனம். அழகான சிவலிங்கத் திருமேனி. கோயில் அழகாக நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது. ஞானசம்பந்தர் மனைவியுடன் (தோத்திர பூர்ணாம்பிகையுடன்) இத்தலத்தில் இருப்பது விசேஷமானது. சோழ, பாண்டிய, மகாராட்டிர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. கல்வெட்டில் இறைவன் ‘திருப்பெருமண முடைய மகாதேவர்’ என்று குறிக்கப்படுகின்றார். நாடொறும் ஆறுகால வழிபாடுகள் செம்மையாக நடைபெறுகின்றன. இத்தலபுராணம் கொட்டையூர் சிவக் கொழுந்து தேசிகரால் பாடப்பட்டுள்ளது. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் அம்பாள் பேரில் ‘வெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்’ பாடியுள்ளார். ஆரணியைப் பெருங்கருணை வடிவாளை, உலகங்கள் அனைத்தும் ஈன்ற காரணியை சிற்பரையை வெற்பறையன் புதல்விதனைக் கடுக்கையென்னும் தாரணியை யானனத்தர் சிவலோகத்தியாகர் இடந்தன்னில் வாழும் பூரணியை எழில்தரு வெண்ணீற்றுமையை எப்போதும் போற்றி வாழ்வோம் (தலபுராணம்) ‘அன்புறு சிந்தையாகி அடியவர் நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின் றின்புறு மெந்தையிணையடி யேத்துவார் துன்புறு வாரல்லர் தொண்டு செய்வாரே’ (சம்பந்தர்) “-விழிப்பாலன் கல்லூர்ப் பெருமணத்தைக் கட்டுரைக் கச்சோதிதரு நல்லூர்ப் பெருமணம் வாழ் நன்னிலையே” (அருட்பா) |