தலமரம் - கண்டமரம், தாழை. தீர்த்தம் - மயேந்திரதீர்த்தம். கோயில் எதிரில் உள்ளது. கரைகள் செம்மையாக இல்லை. சம்பந்தர் பாடல் பெற்றது. சிறிய ஊர். பழமையான கோயில். கிழக்கு நோக்கிய வாயில். மூன்று நிலைகளையுடைய சிறிய ராஜகோபுரம். வெளிப் பிராகாரத்தில் விநாயகர், காசிவிசுவநாதர், திருமால் தேவியருடன், சிவலிங்கம், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. வலம் முடித்து, முன்னுள்ள வௌவால் நெத்தி மண்டபத்தை யடைந்தால் வலப்புறம் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். உள்ளே சென்றால் வலப்பால் நடராசசபை. சிவகாமியும் மாணிக்கவாசகரும் உடன் காட்சியளிக்கின்றனர். நேரே சிவலிங்கத் திருமேனி - மூலவர் தரிசனம். ஆங்கிலேயர் ஆட்சியில், கிளைவ், இங்கு மன்னன் ஒருவன் ஆண்டு வந்த பகுதியைக் குண்டுவைத்துத் தகர்த்ததாகவும் அப்பகுதி இன்றும் தீவுக்கோட்டை என்று வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இவ்விடம் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரு சில வீடுகள் உள்ள இங்குப் பழமையான கொடிக்கம்பம், கொடிமேடை முதலிய சின்னங்கள் உள்ளன. இங்கு மிக அழகான மூர்த்தத்தையுடைய விஜயகோதண்ட ராமசாமிப் பெருமாள் கோயில் உள்ளது. இத் தீவுக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட நடராசத் திருமேனிதான் இக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கும், தீவுக்கோட்டை நடராசருக்கும் தனித்தனியே அரசால் மோகினிப் பணம் தரப்பட்டு வருகின்றது. இவ்வூரில் யாத்திரிகர்கள் தங்குவதற்கு எவ்வித வசதியும் இல்லை. குருக்கள் வீடு கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது. கோயிலில் நித்தியப்படி மட்டுமே நடைபெறுகிறது. நாடொறும் நான்கு கால பூஜைகள். இத்தலத்திற்குப் பக்கத்தில் நல்லூர்ப்பெருமணம் உள்ளது. ஆண்டுதோறும் இன்றும் பங்குனித் திங்களில் ஒரு வாரம் சூரியஒளி சுவாமி மீது படுகிறது. இதைச் சூரிய வழிபாடாகக் கொண்டாடுகின்றனர். ‘சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும் இந்திரன் வழிபடஇருந்த எம் இறையவன் மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள் அந்தமில் அழகனை அடிபணிந்துய்ம் மினே.’ (சம்பந்தர்) |