மூலவர் சந்நிதி - சற்றுயர்ந்த பாணம். அழகான திருமேனி. வழிபடுவோர்க்கு வளமும் அமைதியும் நல்கும் சந்நிதானம். உட்புறச் சுவரில் தலப்பதிகக் கல்வெட்டுகள் உள்ளன. சைவ எல்லப்ப நாவலர் இவ்வூர்க்குத் தலபுராணம் பாடியுள்ளார். மாசிமகத்தில் பெருவிழா நடைபெறுகிறது. நாடொறும் ஆறுகால வழிபாடுகள் சுவேதாரண்யேசுவரருக்கு காமிகாகமத்தின் படியும் அகோர மூர்த்திக்கு காரணாகமத்தின் படியும் இங்குள்ள நடராசப் பெருமானுக்கு மகுடாகமத்தின்படியும் பூசைகள் நடைபெறுகின்றன. “நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்றேத்திப் பாதம் பன்னாள் பணியும் அடியார் தங்கண்மேல் ஏதம் தீரஇருந்தான் வாழும் ஊர்போலும் வேதத் தொலியால் கிளிசொற் பயிலும் வெண்காடே.” (சம்பந்தர்) “தூண்டுசுடர் மேனித்தூநீறாடிச் சூலம் கையேந்தியோர் சுழல்வாய் நாகம் பூண்டுபொறியர வங்காதிற்பெய்து பொற்சடைகள் அவைதாழப் புரிவெண்ணூலர் நீண்டு கிடத்திலங்கு திங்கள்சூடி நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங்கொண்டார் வேண்டு நடை நடக்கும் வெள்ளேறேறி வெண்காடுமேவிய விகிர்தனாரே.” (அப்பர்) “காதலாலே கருதுதொண்டர் காரணத்தீராகி நின்றே பூதம் பாடப் புரிந்து நட்டம் புவனியேத்த ஆடவல்லீர் நீதியாக ஏழிலோசை நித்தராகிச் சித்தர்சூழ வேதமோதித் திரிவதென்னே வேலைசூழ் வெண்காடனீரே.” (சுந்தரர்) அகோர மூர்த்தி துதி “கருநிறமும் மணிமாலை புனையழகும் வளையெயிறும் கவினைச் செய்ய எரிசிகையும் நுதல்விழியும் நடைக்கோல இணையடியும் இலகஎட்டுக் கரநிலவ மணிபலகை வெண்டலை வாள் கடிதுடியோர் சூலம்ஏற்று வெருவ மருத்துவனையடர் அகோரசிவன் துணைப்பதச்சீர் விளம்புவோமே.” (சைவ எல்லப்ப நாவலர் - தலபுராணம்) (சலந்தரன் மகன் - மருத்துவன்) |