மார்பிலடித்து வீழ்த்தினார். இலக்குமி மாங்கல்ய பிச்சை கேட்க அவ்வாறே அருள்செய்ய மகாவிஷ்ணு உயிர்பெற்றெழுந்து வணங்கினார். தம் தோலையும் எலும்பையும் அணிந்து கொள்ளுமாறு அவர் வேண்ட, இறைவனும் எலும்பை கதையாகக்கொண்டு, தோலைச் சட்டையாகப் போர்த்து அருள் செய்தார். இவ்வடிவமே சட்டைநாதர் வடிவமாகும்.) மூவர் பாடல் பெற்ற தலம். தருமையாதீனத் திருக்கோயில். மாணிக்கவாசகர், பூந்துருத்திகாடநம்பி, பட்டினத்தடிகள் நம்பியாண்டார் நம்பிகள், அருணகிரிநாதர், தருமையாதீனத்துப் பத்தாவது குருமூர்த்தி சிவஞானதேசிகர், திருவாவடுதுறை ஆதீனத்து எட்டாவது குருமூர்த்தி மாசிலாமணி தேசிகர், அருணாசலக்கவிராயர் முதலியோர் சீகாழியின் சிறப்பையும் ஞானசம்பந்தரின் பெருமையையும் பல படப் புகழ்ந்து பாடியுள்ளனர். கிழக்கு ராஜகோபுரம் பிரதானவாயில். இடப்பால் அலுவலகம் உள்ளது. விசாலமான உள்ளிடம். உள்வாயிலில் வெளிப்புறம் ‘தோடுடைய’ பதிகம் சலவைக்கல்லில் பதிக்கப்பட்டுள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நேரே மூலவர் தரிசனம். விபூதிப்பட்டையும், பட்டும் சார்த்தித் தரிசிக்கும் போது கம்பீரமான தோற்றம் மனத்திற்கு நிறைவாக இருக்கிறது. மூலவர் - பிரமபுரீஸ்வரர். பக்கத்தில் திருஞானசம்பந்தர் சந்நிதி உற்சவத்திருமேனியுடன் (கையில் பாற்கிண்ணம் ஏந்தி நின்ற நிலையில்) உள்ளது. கருவறை வெளிச்சுவரில் ஞானசம்பந்தர் வாழ்க்கைச் சிற்பங்கள் ஓவியங்களாக எழுதப்பட்டுள்ளன. பிராகாரத்தில் அறுபத்து மூவர் சந்நிதி உள்ளது. சோமாஸ்கந்தர் சந்நிதி அழகாகவுள்ளது. மலைப்படிகளேறிக் கட்டு மலையின் மீது சென்றால், ஞானப்பாலைத்தந்தருளிய தோணியப்பரைத் தரிசிக்கலாம். இச்சந்நிதி கயிலாய அமைப்பிலுள்ளது. இங்குள்ள சாளரத்தில் நின்று பார்த்தால் (சற்றுச்சாய்வாக) பிரமதீர்த்தக் குளம் தெரிகிறது. ‘பிரமாபுரம் மேவியபெம்மான் இவன்’ என்று சம்பந்தர் சுட்டிக்காட்டிய அமைப்பு நினைவு கூரத்தக்கது. அதற்கும் மேலேறிச் சென்றால் சட்டையப்பரைத் தரிசிக்கலாம். சட்டைநாதர் பெயரிலேயே தேவஸ்தானம் விளங்குகிறது. இம் மூர்த்திகரம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இச்சந்நிதி உயரத்தில் உள்ளது. குறுகலான வழியே நுழைந்து, மரப்படிகளேறித் தரிசிக்க வேண்டும். ஆண்கள் சட்டையைக் கழற்றி விட்டு ஏறிச்சென்று தரிசித்துப் பின்னர் வந்து போட்டுக் கொள்ள வேண்டும். அவ்வாறே, பெண்கள் |