கலிக்காமர், சுந்தரருடன் வந்து தரிசித்த தலம். வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் 3 கி.மீ. சென்றால் ஒருபுறம் திருப்புன்கூர் கைகாட்டியும், மறுபுறம் திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில் என்ற வளைவும் உள்ளது. அதனுள் - அச்சாலையில் 1 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.
இறைவன் - சிவலோகநாதர் இறைவி - சொக்கநாயகி, சௌந்தரநாயகி தலமரம் - புங்கமரம்
தீர்த்தம் - கணபதி தீர்த்தம். (கோயிலின் பின்புறம் உள்ளது). (புங்கு + ஊர் = புங்கூர் = புன்கூர். சமஸ்கிருதத்தில் கஞ்சாரண்யம் என்று பெயர்). பிரமன், இந்திரன், அகத்தியர், சந்திரன், சூரியன், இராசேந்திர சோழன், அக்கினி, பதஞ்சலி, வியாக்ரபாதர், சப்தகன்னியர் முதலியோர் வழிபட்ட தலம். சுந்தரர்பால் கோபங்கொண்ட விறன்மிண்ட நாயனார் (இத்தலத்திற்கு வந்து தங்கியிருந்து) வழிபட்ட சிறப்புடைய தலம். இங்குள்ள தீர்த்தம் விநாயகருடைய துணையால் நந்தனார் வெட்டியதாகும்.
மூவர் பாடல் பெற்ற தலம்.
இத்தலத்திற்குரிய பன்னிருவேலி பெற்ற வரலாறு :- தன்நாட்டில் பஞ்சம் நிலவியதால் இராசேந்திரசோழன் எல்லாச்சிவாலயங்களிலும் பூசைகளைச் செய்தான். அவன் கனவில் இறைவன் தோன்றித் திருப்புன்கூர்ச் சிவலோக நாதரை வழிபடின் மழையுண்டாகும் என்றருள, அவ்வாறே மன்னனும் அங்கு வந்து சுவாமியை வழிபட்டான். அப்போது சுந்தரர் அங்கு வந்தார். அரசன் அவரை வணங்கி, சந்நிதியில் பாடி மழை பெய்விக்குமாறு வேண்டினான். சுந்தரரும் மழைபெய்வித்தால் சுவாமிக்குப் பன்னிருவேலி நிலமளிக்குமாறு மன்னனுக்குக் கட்டளையிட்டுவிட்டுப் பாடினார். மழை பெய்தது. எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழைமிகுதியைக் கண்ட மன்னன், அதை நிறுத்தாவிடில் பெருஞ்சேதம் உண்டாகும் என்றெண்ணிச் சுந்தரரைப் பார்த்து நிறுத்துமாறு பாடியருள வேண்ட, அவரும் மேலும் பன்னிருவேலி கேட்க, மன்னனும் தர, சுந்தரரும் பாடியருள மழையும் நின்றது.
திருநாளைப்போவாரின் (நந்தனாரின்) ஊரான ஆதனூர் இத்தலத்திற்குப் பக்கத்தில் 5 கி.மீ.ல் உள்ளது. திருப்புன்கூருக்கு வந்து |