94/40. திருஆப்பாடி. திருவாய்ப்பாடி. | சோழநாட்டு (வடகரை)த் தலம். மக்கள் வழக்கில் ‘திருவாய்ப்பாடி’ ஆயிற்று. கும்பகோணம் - திருப்பனந்தாள் சாலையில், சேங்கனூர் சாலையைத் தாண்டி, திருவாய்ப்பாடி உள்ளது. சாலையோரத்தில் ஊர் உள்ளது. ஊரை அடைந்து இடப்புறமாகச் செல்லும் வீதியில் சென்றால் கோடியில் கோயில் உள்ளது. (சேங்கனூர் என்பது சேய்ஞலூர் ஆகும்.) திருவாய்ப்பாடி அடுத்து திருப்பனந்தாள் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் மண்ணியாறு ஓடுகிறது. இத்தலம் சண்டேசுவரர் வழிபட்ட பெருமையுடையது. மிகப் பழைமையான கோயில். கோயிலுக்கு வெளியில் தென்னந் தோப்பு உள்ளது. நல்ல நிழல். இறைவன் - பாலுகந்தநாதர், பாலுகந்தீஸ்வரர். இறைவி - பிருகந்நாயகி, பெரியநாயகி. தலமரம் - ஆத்தி. அப்பர் பாடல் பெற்றது. ராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் தாண்டிச் சென்றால் வலப்புறத்தில் பயனின்றியிருக்கும் மண்டபமொன்றுள்ளது. கொடிமரமில்லை. வெளிச்சுற்றில் சந்நிதிகள் எவையுமில்லை. முன்மண்டபம் வௌவால் நெத்தியமைப்புடையது. வலப்பால் அம்பாள் சந்நிதி, தெற்கு நோக்கியுள்ளது. நின்ற திருக்கோலம். அடுத்துள்ள மண்டபத்தைத் தாண்டிச் சென்றால் நேரே மூலவர் சந்நிதி. இம்மண்டபத்தில் வலப்பால் பைரவர், சூரியன், சனிபகவான் திருமேனிகள் உள்ளன. நடராசமூர்த்தம் கம்பீரமாக அழகாகக் காட்சியளிக்கிறது. மூல மூர்த்தம் - சிவலிங்கத் திருமேனி தீபாராதனை ஒளியில் பிரகாசிக்கின்றது. கோயில் மிகவும் பழுதடைந்துள்ளது. இக்கோயிலுக்கு ஊர் மக்கள் வருகிறார்களா என்பதே ஐயமாகவுள்ளது. திருப்பணி செய்வது மிகவும் அவசியமான தொன்று. இல்லையெனில் கோயில் அடுத்த தலைமுறையினருக்குக் காணக்கிடைக்குமோ? என்பதை எண்ணில் நெஞ்சு கலங்குகிறது. குருக்கள் வீடு கோயிலின் பக்கத்தில் உள்ளது. அவருடைய பாதுகாப்பிலேயே இக்கோயில் காப்பாற்றப்பட்டு வருகின்றது. 1961-ல் குடமுழுக்கு நடந்துள்ளது. வாகனங்கள் எல்லாம் |