சோழநாட்டு (வடகரை)த் தலம். கும்பகோணம் - திருவையாறு சாலையில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ. தொலைவு. நகரப் பேருந்து செல்கிறது. கும்பகோணம் சுவாமிமலை டவுன்பஸ் கொட்டையூர் வழியாகச் செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில், ஊர் உள்ளது. ஆமணக்கு கொட்டைச் செடியின் கீழ் லிங்கம் வெளிப்பட்டதால் ஊர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது. சோழ மன்னனுக்கும் ஏரண்ட முனிவருக்கும் கோடிலிங்கமாகக் காட்சி தந்தமையால் கோடீஸ்வரர் என்று சுவாமிக்கும் கோடீச்சரம் என்று கோயிலுக்கும் பெயர் வந்தது. தலத்தின் வேறு பெயர்கள் வில்வாரண்யம், ஏரண்டபுரம் என்பன. ஊரில் “கோடீஸ்வரர் கோயில்” என்று பெயர் சொல்லிக் கேட்டால் மக்கள் எளிதில் கோயிலைக் காட்டுகிறார்கள். (ஏரண்டம் : கொட்டைச்செடி. அதன் கீழிருந்து தவம் செய்தமையால் அம்முனிவர் ஏரண்டமுனிவர் என்று பெயர் பெற்றார்.) சுவாமிமலையோடு இணைந்த கோயில். மார்க்கண்டேயர் வழிபட்ட தலம். பத்திரயோகி முனிவருக்கு இறைவன் கோடிவிநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தம் திருவுருவாகக் காட்சி தந்ததால் இறைவன் கோடீஸ்வரர் எனப்பட்டார். |