கிழக்கு நோக்கிய சிறிய ராஜகோபுரம். பிராகாரத்தில் விநாயகர் முதலான சந்நிதிகள் முறையாகவுள்ளன. உள்ளிடம் விசாலமாக உள்ளது. சுற்று மதிலும் கோயிலும் நன்குள்ளன. மூலவர் அழகான மூர்த்தி. விமானம் ஏகதளம் - உருண்டை வடிவமானது. அம்பாள் சாளக்ராம விக்ரஹம். தெற்கு நோக்கிய சந்நிதி. தன்னந்தனியே கோயில் இருந்தாலும், காண்பதற்கு அழகாகக் காட்சியளிக்கிறது. 24.8.1980ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. நித்தியபூஜை இரு காலம் நடைபெறுகிறது. (திருக்கானூர் என்னும் ஊர்ப் பெயர் மாறி, இன்று மக்கள் குடியிருப்பு ஒருசிலவே இருப்பதாலும், மணற்பகுதியை அடுத்திருப்பதாலும் மக்கள் இவ்விடத்தை மணல் மேடு என்றே வழங்குகின்றனர்.) “தமிழின் நீர்மை பேசித்தாளம் வீணை பண்ணி நல்ல முழவ மொந்தை மல்கு பாடல் செய்கையிட மோவார் குமிழின்மேனி தந்து கோல நீர்மையது கொண்டார் கமழுஞ் சோலைக் கானூர் மேய பவள வண்ணரே.” (சம்பந்தர்) “திருவின் நாதனும் செம்மலர் மேலுறை உருவனாயுலகத்தின் உயிர்க் கெலாம் கருவனாகி முளைத்தவன் கானூரில் பரமனாய பரஞ்சுடர் காண்மினே.” (அப்பர்) -தேய்க்களங்கில் வானூர் மதிபோன் மணியாற் குமுதமலர் கானூர் உயர் தங்கக் கட்டியே. (அருட்பா) அஞ்சல் முகவரி :-
திருக்கானூர் கோயில் சிவாசாரியார் விஷ்ணம் பேட்டை & அஞ்சல் (வழி) திருக்காட்டுப் பள்ளி. தஞ்சை மாவட்டம் - 613 105. |