மிகச்சிறிய கிராமம். கோயிலுக்குப் பக்கத்தில் ‘காக்கைத் தீர்த்தம்’ என்னும் பெயரில் திருக்குளம் உள்ளது. சுவாமி சந்நிதிக்கு அப்பால் வெளியே இருந்த அம்பாள் சந்நிதி, பிற்காலத்தில் கோயிலின் உள்ளே பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. விநாயகர், முருகன், விசுவநாதர், விசாலாட்சி, துர்க்கை, பிரமன், நவக்கிரகங்கள், திருமால், பைரவர், நால்வர், சப்தமாதாக்கள் சந்நிதிகள் உள்ளன. சண்டேசுவரர் உள்ளார். கல்வெட்டில் இத்தலம் ‘காலியூர்க் கோட்டத்து இருகழி நாட்டு மாமண்டூர்ப் பற்றத்துப் பல்லவபுரமான குரங்கணில்முட்டம்’ எனக் குறிக்கப் படுகின்றது. இறைவன் திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார் என்றும், கொய்யாமலர் ஈசுவரதேவர் என்றும் குறிப்பிடப்படுகின்றார். சகம் 1451ல் பூஜைக்காக கிருஷ்ணதேவராயர் பல்லவபுரம் கிராமத்தை இக்கோயிலுக்கு அளித்ததாகக் குறிப்புள்ளது. இப்பகுதி மக்களிடையே கொய்யாமலை என்னும் பெயர் பலருக்கு இருப்பதை இன்றும் காணலாம். ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திட்டத்தில் இக்கோயிலின் சுற்றுமதில், சுவாமி அம்பாள் விமானங்கள் திருப்பணிகள் செய்யப்பட்டு, ரக்தாக்ஷி, தை, 22-ல் (4-2-85-ல்) மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. “இறையார் வளையாளை யொர் பாகத்து அடக்கிக் கறையார் மிடற்றான் கரி கீறிய கையான் குறையார் மதி சூடி குரங்கணின் முட்டத்(து) உறைவான் எமையாளுடை யொண் சுடரானே.” “மையார் நிறமேனி யரக்கர் தங் கோனை உய்யா வகையால் அடர்த்தின்ன ருள்செய்த கொய்யார் மலர் சூடி குரங்கணின் முட்டம் கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே.” (சம்பந்தர்) -“முச்சகமும் ஆயுங்குரங்கணின் முட்டப் பெயர் கொண்டோங்குபுகழ் ஏயும் தலம் வாழ்இயன் மொழியே. (அருட்பா) |