சோழநாட்டு (வடகரை)த் தலம். திருச்சிக்குப் பக்கத்தில் உள்ள தலம். திருச்சியிலிருந்து நகரப் பேருந்து அடிக்கடி செல்கிறது. கோயில்வரை வாகனங்கள் செல்லும். திருச்சியின் ஒருபகுதியாகவே இத்தலம் உள்ளது. இத்தலத்திற்குப் பக்கத்தில் தான் ஸ்ரீரங்கம் - திருவரங்கம் உள்ளது. ‘ஜம்புகேஸ்வரம்’ என்று புகழப்படும் இத்தலம் பஞ்சபூதத் தலங்களுள் அப்புத்தலமாக (நீர்த்தலமாக) விளங்குவது. வெண்ணாவல் மரத்தடியில் (ஜம்பு) சுவாமி எழுந்தருளியிருப்பதால் இத்தலம் ஜம்புகேஸ்வரம் என்று வழங்கப்படுகிறது. சுவாமி ஜம்புகேஸ்வரர். சம்பு முனிவரே வெண்ணாவல் மரமாக வந்து பிறந்தார் என்பது வரலாறு. |