பெயரால் அமைந்தவை. கல்விச் சாலையைத் தவிர இவர் தர்ம நூல்களில் சொல்லப்பட்ட எல்லா மகாதானங்களையும் செய்தார். மகாதானபுரம், திருவிடைமருதூரிலும், மாயூரம், திருவெண்காடு முதலிய ஊர்களிலுமுள்ள மகாதானத் தெருக்கள், திருவையாறு, தஞ்சை வெண்ணாற்றங்கரை, திருவலஞ்சுழி, கும்பகோணம், திருவிடைமருதூர், மாயூரம் முதலிய இடங்களில் நதி தீரத்தில் ஜோடியான விமனாங்களையுடைய புஷ்ப மண்டபங்களும் இவர் கைங்கர்யமே. கும்பகோணத்தில் ராஜா பாடசாலைக்கு அடுத்த யாக சாலைத்தெரு இவருடைய வேள்விச் சாலை. திருவிடைமருதூர் புத்யோத்ஸவ வெள்ளி ரதமும், வெள்ளி ரிஷப வாகனமும் இவருடைய திருப்பணி. அநேகமாகச் சோழர்களுக்குப்பின் ஆலயத் திருப்பணிகளை எல்லாம் திருத்தியமைத்தவர் இந்த மகான். கும்பகோண க்ஷேத்திர மாகாத்மியத்தின் முடிவில் ஒரு சிறு சுலோகம் தென்படுகிறது. அதாவது :- கோவிந்ததீக்ஷிதோ நாம மஹாநாஸீத் கலௌ யுகே தேந ஷோடசலிங்காநி ஸ்தாபிதாதி ஸரோவரே ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் திருமடம் உள்ள இத்தலத்தில் பல கோயில்கள் இருப்பினும் பிரதானமானது அ/மி. கும்பேசுவரர் கோயிலேயாம். இதுவே தலைமைக் கோயில். இறைவன் - கும்பேசுவரர், அமுதேசுவரர், குழகர். இறைவி - மங்களாம்பிகை தலமரம் - வன்னி. தீர்த்தம் - ஆதிவிநாயகர். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. கிழக்கு நோக்கிய சந்நிதி. பிரதானகோபுரம் ஒன்பது நிலைகளை யுடையது. தெற்கு நீங்கலாக ஏனைய மூன்று திசைகளிலும் மூன்று கோபுரங்கள். கோயிலுக்கு மூன்று பிராகாரங்கள். முற்றவெளி விநாயகரையும் தண்டபாணியையும் தொழுது வாயிலைக் கடந்தால் வலப்பால் லட்சுமி நாராயணப் பெருமாள் தரிசனம். நேரே கவசமிட்ட கொடிமரம் - முன் மண்டபம் - மங்களவிலாச மண்டபம் - அலங்கார மண்டபம் என்றெல்லாம் வழங்கப்படுகிறது. வேலைப்பாடமைந்த தூண்களையுடையது. மண்டபத்தில் இடப்பால் திருஞானசம்பந்தரின் திருவெழுகூற்றிருக்கை, தேர்வடிவில் வண்ணச்சலவைக் கல்லில் பதிக்கப் பட்டுள்ளது. வலப்பால் நவக்கிரக சந்நிதி. வல்லப விநாயகரைத் தொழுது உட்செல்கிறோம். |