பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 487


      பிரதான வாயில் கிழக்கு கோபுரம் - ஐந்து நிலைகளையுடையது.
நிருத்த கணபதி, நந்தி, சூரியதீர்த்தம் உள்ளன. நூற்றுக்கால் மண்டபம். சூரிய
தீர்த்தத்தின் கரையில் மழுப்பொறுத்த விநாயகர் சந்நிதி.

    இரண்டாம் பிராகாரத்தில் நாகராஜா உருவமுள்ளது. சேக்கிழார்
திருப்பணி செய்த மண்டபமுள்ளது. சேக்கிழார், அவர் தாயார், தம்பி
உருவங்கள் உள்ளன. நடராசசபையும் எதிரே நால்வர் சந்நிதியும் உள்ளன.
அம்பாள் சந்நிதி இரண்டு உள்ளது.

    1) சுவாமிக்கு அருகிலுள்ளது - ‘பிறையணிநுதலாள்’ சந்நிதி.

    2) கிரிகுஜாம்பிகை சந்நிதி தனிக்கோயிலாகச் சிறப்புடன் விளங்குகிறது.
சுதை உருவம், தை மாதத்தில் மட்டும் புனுகு சட்டம் சார்த்தப்படுகிறது.

     கண்டராதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது.
(1) சேக்கிழார் உள்மண்டபத்தையும் (2) அச்சுதப்ப நாய்க்கரிடம் மந்திரியாக
இருந்த கோவிந்த தீக்ஷிதர் வெளிமண்டபத்தையும் கட்டியதாகக் கூறுவர்.
கார்த்திகையில் பெருவிழா. வைகாசி பூசத்தில் சேக்கிழார் குருபூஜை
நடைபெறுகிறது. இப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல
நிறமாகிவிடுகிறது. அண்மையில் உள்ளது ஒப்பிலியப்பன் கோயில்.
திருநாகேச்சுரம் சுவாமிநாத முதலியார் நாகேச்சுரப் பதிற்றுப்பத்தந்தாதி
பாடியுள்ளார். நாகநாத வெண்பா எனும் நூலொன்று இருந்ததாகத் தெரிகிறது.
இப்போது அது கிடைக்கவில்லை.

    “பொன்னேர் தரு மேனியனே புரியும்
     மின்னேர் சடையாய் விரை காவிரியின்
     நன்னீர் வயல் நாகேச்சுர நகரின்
     மன்னே என வல்வினை மாய்ந்து அறுமே.”     (சம்பந்தர்)

    “நல்லர் நல்லதோர் நாகங் கொண்டாட்டுவர்
     வல்லர் வல்வினை தீர்க்கு மருந்துகள்
     பல்லிலோடு கையேந்திப் பலிதிரி
     செல்வர் போற்றிரு நாகேச்சரவரே”            (அப்பர்)

     “பாலனது ஆருயிர்மேற் பரியாது பகைத்தெழுந்த
      காலனை வீடுவித்துக் கருத்தாக்கியது என்னை கொலாம்
      கோலமலர்க் குவளை கழுநீர் வயல்சூழ் கிடங்கில்
      சேலொடு வாளைகள் பாய் திருநாகேச் சரத்தரனே.”  (சுந்தரர்)