சம்பந்தர் பாடல் பெற்றது. இத்திருக்கோயில் இலக்குமி வழிபட்டது. சண்பகாரண்யம். நித்ய வாசபுரம் முதலியன இத்தலத்தின் வேறு பெயர்கள். முகப்பு வாயிலைக் கடந்து சென்றால் பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சனீஸ்வரன், சூரியன் சந்நிதிகள் உள்ளன. படிகளேறிச் சென்றால் நேரே மூலவர் தரிசனம். சுயம்புமூர்த்தி - அழகானபாணம். பக்கத்தில் கீழே தனியே அம்பாள் கோயில் உள்ளது. கோயில் பாடல் பெற்ற பெருமையுடையதாயினும் இன்று சீரழிந்து காண்போர் நெஞ்சும் கலங்குமளவில் உள்ளது. பிராகாரச் சந்நிதிகள் கிலமாகவுள்ளன. பாதுகாப்பும் வசதியும் அற்று கோயில் பொலிவுகுறைந்து காணப்படுகிறது. தரிசிக்கும்போது உள்ளத்தில் மிஞ்சுவது கோயிலின் நிலையை எண்ணிவருந்தும் ஏக்கமே ! குடமுழுக்கு நடைபெற்றுப் பல்லாண்டுகள் ஆயினவாம். நாடொறும் ஒருகால வழிபாடு சிவாசாரியாரின் உள்ளத்து ஆர்வத்தால் நடைபெறுகிறது. தற்போதுதான் திருப்பணிகள் செய்வதற்காக குழு அமைக்கப்பட்டு அறநிலையத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை. “துளமதியுடைமறி தோன்று கையினர் இளமதி யணிசடை யெந்தை யாரிடம் உளமதியுடையவர் வைகலோங்கி வளமதி தடவிய மாடக் கோயிலே.” (சம்பந்தர்) -“ஞாலத்து நீடக்கோர் நாளுநினைந்தேத்திடும் வைகல் மாடக் கோயிற்குண் மதுரமே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. வைகல்நாதர் திருக்கோயில் வைகல் - மேலையூர் அஞ்சல் (வழி) ஆடுதுறை - 612 101 தஞ்சை மாவட்டம் தலம் - 32 |