சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. கிழக்கு நோக்கிய சந்நிதி. எதிரில் குளம். மகாமண்டபத்தில் நடராச சபை உள் பிராகாரத்தில் விநாயகர், அப்பர், முருகன், கஜலட்சுமி பைரவர் சந்நிதிகள். கோஷ்டத்தில் முறையான மூர்த்தங்களோடு நடராசரும், சட்டை நாதரும் பிட்சாடனரும் காட்சியளிக்கின்றனர். மூலவரின் ஆவுடையாரில் பசுவின் குளம்பு காணப்படுகிறது. இக்கோயிலின் உற்சவ மூர்த்திகள் வேறு கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நூலின் முன் பதிப்பில், இக்கோயிலைக் காப்பாற்ற எவருக்கு என்று மனம் வருமோ என்று எழுதியிருந்தோம். அதன் பலன் தற்போது ; திருவாவடுதுறை தருமபுரம், சூரியனார் கோயில், திருப்பனந்தாள் காசிமடம் முதலிய குரு மகாசந்நிதானங்களின் அருள்முன்னிலையில் 24.8.1998ல் திருப்பணிகள் தொடங்கப் பெற்று; நிறைவுபெற்று அக்குரு மகாசந்நிதானங்களின் அருள் முன்னிலையிலேயே 22.3.2000 அன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இத்திருப்பணிகளை ஏற்றுச் செய்துள்ள கோவை - Lic காலனி (சிட்கோநகர்) 14. ஏ எண்ணில் வாழும் அருட்செல்வர் திரு.ஆர்.வசந்தகுமார் மற்றும் அவருக்குத் துணையிருந்தோர் அனைவரையும் நெஞ்சாரப் போற்றுகின்றோம். கோயில் குருக்கள் திருவாவடுதுறையில் சந்நிதி வீதியில் வசிக்கின்றார். அங்கிருந்து வந்து - காலை வேளையில் பூஜை செய்துவிட்டுப் போகிறார். ஆதலின் யாத்திரையாக வருபவர்கள் முன்கூட்டியே நாளும் நேரமும் தெரிவித்துவிட்டுச் செல்வதே நல்லதாகும். பராந்தகனின் மனைவி செம்பியன்மாதேவியால் கட்டப்பட்ட கோயில். இது தேரழுந்தூர் செயல் அலுவலரின் நிர்வாகப் பொறுப்பில் உள்ளது. “நீற்றானை நீள்சடைமேல் நிறை வுள்ளதோர் ஆற்றானை அழகமர் மென் முலையாளையோர் கூற்றானைக் குளிர் பொழிற் கோழம்பமேவிய ஏற்றானை ஏத்துமின் உம்இடர் ஏகவே.” (சம்பந்தர்) “முன்னை நான் செய்த பாவமுதலறப் பின்னை நான் பெரிதும் அருளப் பெற்றது அன்னமார் வயற் கோழம்பத்து உள்ளமர் பின்னல் வார்சடையானைப் பிதற்றியே.” (அப்பர்) |