செம்பொன் தியாகர், புத்திரத் தியாகேசர், சொர்ணத் தியாகேசர் மூர்த்தங்கள் உள்ளன. திருமாளிகைத் தேவர் வாழ்ந்த இடமே ஆதீனமாகச் சொல்லப் படுகிறது. திருமாளிகைத்தேவர் ஆலயமுள்ளது. இதற்குப் பக்கத்தில் நமசிவாய மூர்த்திகள் கோயிலுள்ளது. இவருக்குப் பூசை நடைபெற்ற பின்னரே திருமடத்தில் நமச்சிவாய மூர்த்திக்குப் பூசை நடைபெறுவது வழக்கமாம். கோயிலின் மேற்குப் பிராகாரத்தில் திருமூலர் சந்நிதி உள்ளது. திருமாளிகைத் தேவர், நரசிங்கன் என்னும் மன்னனின் படைகளை, கோயில் மதிலில் உள்ள நந்திகளை உயிர் பெற்றெழச் செய்து விரட்டியமையால் இன்றும் கோயில் மதில்களில் நந்திகள் இல்லையென்று சொல்லப்படுகிறது. ஆதீனக் கோயில். நன்கு பராமரிக்கப்பட்டுச் சிறப்பாகவுள்ளது. முதற் பராந்தகன் காலத்திய கல்வெட்டிலிருந்து புரட்டாசி விழாவில் ஒரு நாளில் திருமூலர் நாடகமும் - ஆரியக் கூத்தும் நடந்து வந்ததாகச் செய்தி தெரிய வருகிறது. “இடரினும் தளிரினும் எனதுறு நோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவே எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே. (சம்பந்தர்) “மஞ்சனே மணியுமானாய் மரகதத் திரளுமானாய் நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வினானே துஞ்சும் போதாகவந்து துணையெனக்காகி நின்று அஞ்சல் என்றருள வேண்டும் ஆவடுதுறையுளானே." (அப்பர்) “மண்ணின்மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய வந்தெனையாண்டு கொண்டானே கண்ணிலேன் உடம்பில்அடு நோயால் கருத்தழித்து உனக்கே பொறையானேன். தெண்ணிலா எறிக்குஞ் சடையானே தேவனே திருவாவடு துறையுள் அண்ணலே எனை அஞ்சல் என்றருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே.” (சுந்தரர்) -“வீழும்பொய் தீராவடுவுடையார் சேர்தற் கருந்தெய்வச் சீராவடுதுறையெஞ் செல்வமே.” (அருட்பா) |