வாயிலுக்கு வெளியில் உள்ள ஒரு தூணில் இராமருடைய சிற்பம் உள்ளது. உள்மண்டபத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு முன்புள்ள ஒரு தூணில் வாலி, சுக்ரீவர் போரிடும் சிற்பம் உள்ளது. இராமர் சிற்பத்திடம் நின்று பார்த்தால் வாலி சுக்ரீவ போர்ச்சிற்பம் தெரிகிறது. ஆனால் வாலி சுக்ரீவ சிற்பத்தின் பார்வைக்கு இராமர் சிற்பம் தெரியவில்லை. அவ்வாறு அருமையாக அமைந்துள்ளது. (3) வாலி சுக்ரீவச் சிற்பம் உள்ள தூணின் மறுபுறத்தில் யோக தட்சிணாமூர்த்தி சிற்பம் உள்ளது. (4) பல தூண்களில் ஆஞ்சநேயர் உருவம் உள்ளது. (5) தாலபுரீசுவரரின் சந்நிதிக்கு எதிரில் உள்ள தூணில் புருஷாமிருகத்தின் சிற்பம் உள்ளது. (6) ஒரு தூணில் சுந்தரர், மாணிக்கவாசகரும் மற்றொரு தூணில் சம்பந்தர் அப்பரும் உள்ளனர். (7) அடுத்துள்ள தூணில் ஒரு பக்கம் ஏகபாத மூர்த்தியும் மறுபக்கம் கருடாழ்வார் சிற்பமும் உள்ளது. (8) கருடனுக்கு எதிரில் கண்ணன் குழலூதும் சிற்பமுள்ளது. (9) ஏகப்பச் செட்டியாரின் உருவத்திற்குப் பின்புறம் உள்ள தூணில் உயரே சமணர் கழுவேறும் சிற்பம் உள்ளது. கோயிலுக்கு வெளியில் கோட்டை முனீஸ்வரர் கோயில் உள்ளது. முனீஸ்வரர் யோகாசனத்தில் அமர்ந்த நிலையில் வலக்கையில் உருத்திராக்க மாலை கொண்டும், இடக்கையைத் தொடைமீது வைத்துக் கொண்டும், சடாமுடியுடன் காட்சி தருகின்றார். ஒருபுறம் துவார விநாயகரும் மறுபுறம் இடக்காலில் மட்டும் யோக பட்டங்கொண்டு யானைமீது அமர்ந்துள்ள ஐயப்பனும் காட்சி தருகின்றனர். கோயிலுக்கு எதிரில் வன்னிமரம் உள்ளது. அகத்தியர் பூசித்தபோது, இம்மூனீஸ்வரர் பனைக் கனிகளை உதிரச் செய்ய, அகத்தியர் அதையும் இறைவனுக்குப் படைத்தமையால் இன்றும் பனைக்கனி (பனம்பழம்) கிடைக்குங் காலங்களில் சுவாமிக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. தேவகோட்டை திரு.ஏகப்பச் செட்டியார் அவர்களின் திருப்பணி அவர் புதல்வர்களால் நிறைவுற்று 1929ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் தற்போது நகரத்தாராலேயே ஆலயத் திருப்பணிகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் 22 கல்வெட்டுக்கள் அரசால் படியெடுக்கப் பட்டுள்ளன. அவை விஜயநகர மன்னர்கள் முதலாம் இராசேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் முதலியோர் காலத்தியவை. கல்வெட்டில் இறைவன் ‘திருப்பனங்காடுடைய நாயனார்’ என்று குறிக்கப்பெறுகின்றார். ஊர்ப்பெயர் ‘காலியூர்க் கோட்டத்து கழுமலநாட்டுத் திருப்பனங்காடு’ என்று பேசப்படுகிறது. |