“கண்ணார்ந்த நெற்றியுடையார் போலும் காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும் உண்ணா வரு நஞ்சம் உண்டார் போலும் ஊழித் தீயன்ன ஒளியார் போலும் எண்ணாயிரங்கோடி பேரார் போலும் ஏறேறிச் செல்லும் இறைவர் போலும் அண்ணாவும் ஆரூருமேயார் போலும் ஆக்கூரில் தான்தோன்றியப்பனாரே.” (அப்பர்) - பொங்குமிருட் கூறுதிரு வாக்கூர் கொடுப்பன போற்சூழ்ந்து மதில் வீறு திருவாக்கூர் விளக்கமே. (அருட்பா) அஞ்சல் முகவரி:- அ/மி. தான் தோன்றீசுவரர் திருக்கோயில் ஆக்கூர் & அஞ்சல் - 609 301 மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.
164/47. திருக்கடவூர் திருக்கடையூர் | சோழநாட்டு (தென்கரை)த் தலம். மயிலாடுதுறை - தரங்கம்பாடி பேருந்துச் சாலையில் இத்தலம் உள்ளது. அடிக்கடி பேருந்து வசதியுண்டு. அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. மார்க்கண்டேயருக்காக இறைவன் எமனை உதைத்தருளிய தலம். “கறுவி வீழ் காலன் மார்பிற் சேவடிக் கமலஞ் சாத்திச் சிறுவனுக்கு ஆயுள் ஈந்த சேவகப் பெருமான் மேய அறை புனற் பழன மூதூர்” (திருவிளை.புரா-அருச் 22) திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமரந்திரத்தலம், பாபவிமோசன புண்ணிய வர்த்தம் என்பன வேறு பெயர்கள். |