சோழநாட்டு (தென்கரை)த் தலம். காரைக்காலுக்குப் பக்கத்தில் உள்ளது. தரங்கம்பாடி - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில், புதுவை மாநில எல்லையில் நுழைந்து ‘பூவம்’ கிராமத்தைத் தாண்டி, ‘வரிச்சுக்குடி’ என்னும் கிராமத்தை அடைந்து, அங்கிருந்து பிரியும் கிளைப்பாதையில் 2 கி.மீ. சென்றால் இத்திருக்கோயிலை அடையலாம். வரிச்சுக்குடியில், இக்கிளைப்பாதை பிரியும் இடத்தைக் காட்டும் - திருவேட்டக்குடி என்னும் பெயர் தாங்கிய - கைகாட்டி உள்ளது. சாலை ஓரத்தில் கோயில் உள்ளது. பேருந்தில் கோயில் வாயில்வரை செல்லலாம். அருச்சுனன் வந்து தவஞ்செய்ய, இறைவன் வேட வடிவத்தில் வெளிப்பட்டு அருள் செய்ததாகப் புராண வரலாறு சொல்கிறது. கோயில் அமைந்துள்ள பகுதி ‘கோயில் மேடு’ என்றழைக்கப்படுகிறது. இறைவன் - சுந்தரேஸ்வரர், திருமேனியழகர் இறைவி - சௌந்தரநாயகி, சாந்தநாயகி. தீர்த்தம் - தேவதீர்த்தம், கோயிலுக்கு எதிரில் உள்ளது. தலமரம் - புன்னை, தற்போது இல்லை. சம்பந்தர் பாடல் பெற்ற பதி. ஊர் நடுவே கோயில் உள்ளது. கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் நம்மை வரவேற்கிறது. கோபுரத்தில் சிற்பங்கள் அதிகமாக உள்ளன. உள்ளே விசாலமான இடம். செப்புக் கவசமிட்ட கொடிக்கம்பம் - முன்னால் விநாயகர் சந்நிதி. பிராகார வலம் வரும்போது, சித்தி விநாயகர் சந்நிதி தனிக்கோயிலாக உள்ளது. சுப்பிரமணிய சுவாமி கோயிலும் தனியே உள்ளது. பக்கத்தில் புன்னை வனநாதர் சந்நிதி உள்ளது. கஜலட்சுமி சந்நிதி, சாஸ்தா சந்திகளும், நால்வர், பைரவர், சூரிய சந்திரர்களும் உள்ளனர். கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், துர்க்கையும் உள்ளனர். படிகளேறிச் சென்று மூலவரைத் தரிசிக்கலாம். மூலவர் - சிவலிங்கத் திருமேனி. கிழக்கு நோக்கிய சந்நிதி. சற்று உயரமான மூர்த்தி. தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றது - அழகான மூர்த்தி. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. வேடனாக வந்த தலமூர்த்தி, வேடுவச்சியாக |