பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 55


வழியாகக் காட்பாடி  செல்லும்  சாலையில்   இத்தலம்  உள்ளது.    நகரப்
பேருந்துகள் அடிக்கடி   செல்லுகின்றன.   தனிப்பேருந்தில்     செல்வோர்
சென்னையிலிருந்து- பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில், ராணிப்பேட்டை
முத்துக்கடை (Stop)   அடைந்து ;  இடப்புறமாக   ஆற்காடு   சாலையில்
திரும்பாமல்,   நேரே  செல்லும்  பெங்களூர்/சித்தூர் சாலையில்  சென்றால்
‘சிப்காட்  தொழிற்சாலைப்  பகுதிகளைத் தாண்டி’, சிறப்பு பெற்ற   திருவலம்
இரும்புப் பாலத்தைக் .(திருவலம் பிரிட்ஜ்) கடந்து இத்தலத்தை அடையலாம். 
பாலத்தின் மறுமுனையில் ஊர் உள்ளது.  ஊருக்குள்  நுழையும்    போதே
கோபுரம்  தெரியும்.  ‘நிவா’   நதி      ஓடுகிறது.   நதியின்     கரையில்
சாலையோரத்திலேயே     கோயில்   உள்ளது.     இந்நதி   ஓடிச்சென்று
பாலாற்றில்   ஒன்றாகிறது.   இறைவன்,  தீர்த்தத்தின்  பொருட்டு   ‘நீ, வா’
என்றழைக்க, இந்நதி அருகில்  ஓடிவந்து  பாய்ந்ததால்   இப்பெயர் பெற்றது.
‘நீ வா’ நதி   நாளடைவில்   ‘நிவா’    நதியாயிற்று   என்கின்றனர். இன்று  
‘பொன்னை’ ஆறு என்னும்  பெயரும் கொண்டுள்ளது. இந்நதியிலிருந்துதான்  
பண்டைநாளில்  சுவாமிக்குத் தீர்த்தம்  கொண்டு வரப்பட்டது.   இப்போது
கோயிலுக்கள் கௌரி தீர்த்தமும் தீர்த்தக்  கிணறும்  உள்ளன.   நிவா நதி  
வடக்கிலிருந்து   தெற்காக ஓடுகின்றது.

     இத்தலம் ‘வில்வனம்’ - ‘வில்வாரண்யம்’  எனப்படுகின்றது.    ஒரு
காலத்தில் வில்வக்காடாக இப்பகுதி இருந்தது. அக்காட்டில் ஒரு  பாம்புப்
புற்றில்   சிவலிங்கம்   இருந்தது.   நாடொறும்   பசு   ஒன்று   வந்து,
அச்சிவலிங்கத்தின்மீது பாலைச் சொரிந்து வழிபட்டது. அதனால் புற்றுசிறிது
சிறிதாகக் கரைந்து நாளடைவில்  சிவலிங்கம்  வெளிப்படலாயிற்று   என்று
சொல்லப்படுகிறது.

     கோயிலுள்   தென்னைமரங்களும்   பலாமரங்களும்     உள்ளன.
தொலைவிலிருந்து   பார்க்கும்போது   பசுமையான சோலைகளுக்கிடையே
கோயில்   இருப்பது   கண்ணுக்கு  அழகான  காட்சியாகும்.   சுற்றுமதில்
செம்மையாக உள்ளது.

     பழைய கல்வெட்டில்  இத்தலப்  பெயர் ‘தீக்காலி வல்லம்’    என்று
குறிப்பிடப்பட்டிருப்பதாகச் (சீர்காழிக்குப் பக்கத்தில்   ‘வல்லம்’  என்றொரு
ஊர் இருப்பதால் அதனின் வேறாக இதை அறிவதற்காக) சொல்லப்படுகிறது. .


     இங்குள்ள    அம்பாளுக்கு   ஆதியில்  ‘தீக்காலி   அம்பாள்’
(ஜடாகலாபாம்பாள்) என்றே பெயரிருந்ததாகவும் ; உக்கிர வடிவிலிருந்த
இந்த அம்பாளை, ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது.