172/55. அம்பர்மாகாளம் கோயில் திருமாளம் / திருமாகாளம் | சோழநாட்டு (தென்கரை)த் தலம். மக்கள் ‘கோயில் திருமாளம்’ என்று வழங்குகின்றனர். மயிலாடுதுறை - திருவாரூர்ச் சாலையில் பேரளம் தாண்டிப் பூந்தோட்டம் சென்று அங்குக் கடைவீதியில் “காரைக்கால்” என்று வழிகாட்டியுள்ள இடத்தில் அதுகாட்டும் சாலையில் (இடப்புறமாகச்) சென்று ரயில்வே கேட்டைத் தாண்டி நேரே (அச்சாலையில்) சுமார் 4 கி.மீ. சென்றால் “கோயில் திருமாளம் - மங்கள நாதர் கோயில்” என்று பெயர்ப் பலகையுள்ளது - அவ்விடத்தில் திரும்பினால் கோயிலையடையலாம். சாலையோரத்தில் கோயில் உள்ளது. கோயில்வரை வாகனங்கள் செல்லும். அரிசிலாற்றின் கரையில் தலம் அமைந்துள்ளது. அம்பன், அம்பாசூரன் என்னும் அசுரர்களைக் கொன்ற பாவந்தீரக் காளி, இறைவனைப் பூசித்து வழிபட்ட தலம். எனவே “மாகாளம்” என்று பெயர் பெற்றது. வெளிப் பிராகாரத்தில் காளி கோயில் உள்ளது. பழைமையான கோயில். சோமாசிமாறநாயனார் சோமாயாகஞ் செய்த இடம் இதுதான். இது தொடர்பாகச் சொல்லப்படும் வரலாறு :- சோமாசிமாறநாயனார், நாடொறும் சுந்தரருக்கு அவர் திருவாரூரில் இருந்த போது உணவுக்குத் தூதுவளை கீரை கொண்டு தரும் தொண்டைச் செய்துவந்தார். பரவையாரும் அதைச் சமைத்து இட சுந்தரர் விரும்பிச் சாப்பிட்டு வந்தார். ஒருநாள் சுந்தரர் அக்கீரை கொண்டு வந்து நாடொறும் தருபவர் யார் என்று கேட்டு சோமாசிமாறரைப் பற்றியறிந்து நேரில் கண்டு, அவர் விருப்பம் யாதென வினவினார். அதற்கு அவர், தான் செய்ய விருக்கும் சோமாயாகத்திற்குத் திருவாரூர் தியாகேசப் பெருமான் எழுந்தருளி அவிர்ப்பாகம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அதற்குச் சுந்தரர் உதவ வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். மறுக்கமுடியாத சுந்தரர், சோமாசி மாறரை அழைத்துக் கொண்டு திருவாரூர்ப் பெருமானிடம் வந்து வேண்டுகோளைத் தெரிவித்தார். செவிமடுத்த இறைவன் இசைந்து, தான்வரும் வேடம் தெரிந்து நாயனார் அவிர்ப்பாகம் தரவேண்டும் என்று பணித்தார். நாயனாரும் அதற்கிசைந்தார். நாயனார் யாக குண்டம் அமைத்து யாகத்தைத் தொடங்கினார். அவ்விடம் அம்பர் மாகாளத்திற்கும் அம்பர் பெருந்திருக்கோயிலுக்கும் |