சம்பந்தர் பாடல் பெற்றது. மீயச்சூர் இளங்கோயில் இறைவன் - சகலபுவனேஸ்வரர் இறைவி - மேகலாம்பிகை காளி வழிபட்ட சிறப்புடையது - சிறிய கோயில். சுவாமி சந்நிதிக்கு வடக்கில் உள்ளது. கிழக்கு நோக்கிய பெரிய கோயில். சந்நிதி வீதியில் முதலில் விநாயகர் கோயில் உள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம். பழைமையானது. உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. உள்ளே சென்றதும் நந்தி பலிபீடம். இடப்பால் விஸ்வநாதர் சந்நிதி. வலப்பால் அம்பாள் சந்நிதி. சுதையாலான துவாரபாலகர்களைத் தொழுது, வாயிலைக் கடந்து சென்றால் நேரே மூலவர் தரிசனம். உட்பிராகாரத்தில் நாகலிங்கப் பிரதிஷ்டைகள், சேக்கிழார், நால்வர், சப்தமாதர்கள் வழிபட்ட லிங்கங்கள், விநாயகர், இந்திரன், எமன், அக்னி பெயரிலான லிங்கங்கள், சுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன. கோஷ்டத்தில் உள்ள க்ஷேத்ர புவனேஸ்வரர் மூர்த்தம் சிறப்பாக வுள்ளது. இளங்கோயிலும், கோயிலும் ஒன்றுக்கொன்று பக்கத்தில் உள்ளன. இளங்கோயிலை வலமாக வருகின்றோம். சந்நிதியில் நேரே மூலவரையும் (சகல புவனேஸ்வரர்) வலப்பக்கத்தில் மேகலாம்பிகையையும் தரிசிக்கலாம். பிராகார வலமுடித்துப் படிகளேறிச் சென்றால் வலப்பால் உற்சவ மூர்த்தங்களின் பாதுகாப்பறையும் நேரே மூலவர் தரிசனமும் காணக் கிடைக்கிறது. அம்பாள் - லலிதாம்பிகை அமர்ந்த திருக்கோலம். இளங்கோயிலில் கோஷ்டத்தில் உள்ள சதுர்முக சண்டேசுவரர் திருமேனி தரிசிக்கத்தக்கது. ஆடிப்பெருக்கு, விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சஷ்டி, கார்த்திகைச் சோமவாரங்கள், திருவாதிரை முதலிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. மீயச்சூர் கோயில் செம்பியன்மாதேவி காலத் திருப்பணி பெற்றது. (கோயில்களுள் - நன்னிலக் கோயில் - பெருங்கோயில் கடம்பூர் கோயில் - கரக்கோயில் விளநகர் கோயில் - ஞாழற்கோயில் கருப்பறியலூர் கோயில் - கொகுடிக்கோயில் மீயச்சூர் கோயில் - இளங்கோயில் திருக்கச்சூர் கோயில் - ஆலக்கோயில் |