பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 615


     இறைவன் சிவயோகியார் வடிவில் அங்கு வந்து நீர் கேட்டார்.
இருந்தவர்கள் “உலைக்களத்தில் நீர் ஏது? காய்ச்சிய மழுதான் உள்ளது.
வேண்டுமானால் ஊற்றுகிறோம்” என்றனர்.

     சிவயோகியார், “நல்லது. அதையே ஊற்றுங்கள்” என்றார். கொல்லர்கள்
காய்ச்சிய மழுவை ஊற்ற, வாங்கியுண்ட சிவயோகியார் மறைந்தார் -
உத்தராபதீஸ்வரர் உருவானார். செய்தியறிந்த மன்னன் வியந்து போற்றி,
அத்திருவுருவை கோயிலில் எழுந்தருளுவித்து - கும்பாபிஷேகம்
செய்வித்தான். ஐயடிகள் காடவர் கோனுக்கு இறைவன் சண்பகப்பூவின் மணம்
வீச, காட்சி தந்தருளினார்.
                              (ஆதாரம் - கோயில் வரலாறு)

     நாடொறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் சில
மருந்துப் பொருள்களும் சேர்த்து செய்யப்படும் சீராளங்கறி எனும் பிரசாதம்
- அமுது படையல் விழா நாளன்று மட்டுமே கிடைக்கும்.
மக்கட்பேறில்லாதவர்கள் உத்தராபதியாரை வழிபட்டு, இப்பிரசாதத்தை
உண்டால் புத்திரப்பேறு அடையப் பெறுவர்.

     கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் 1) செங்காடுடைய நாயனார்
2) கணபதீச்சரமுடைய மகாதேவர் 3) கணபதீஸ்வரமுடையார் எனவும் ;
தலத்தின் பெயர் “கயா மாணிக்க வளநாட்டு மருகல் நாட்டு திருச்செங்
காட்டங்குடி” என்றும் குறிப்பிடப்படுகிறது.

     இத்திருக்கோயில் வேளாக்குறிச்சி ஆதீனத்தின் கோயிலாகும்.
உத்தராபதியாருக்கு ஆனி உத்திரம், மார்கழித் திருவாதிரையில், பங்குனி
பரணியில் அபிஷேகம் நடைபெறுகிறது. நடராசர், அபிஷேகங்கள்,
நவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள், தீபம், மார்கழியில் பாவை விழா,
சிவராத்திரி முதலிய விசேஷ வழிபாடுகளும் உற்சவங்களும் நடைபெறுகின்றன.

     
“பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
     சங்காட்டந்த விர்த்தென்னைத் தவிரா நோய் தந்தானே
     செங்காட்டங் குடிமேய சிறுத் தொண்டன் பணிசெய்ய
     வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே.” 
                                           (சம்பந்தர்)

     பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக்கத்தைப்
         பேணிநினைந் தெழுவார்தம் மனத்தேமன்னி
     இருந்தமணி விளக்கதனை நின்றபூமேல்
          எழுந்தருளி யிருந்தானை எண்தோள்வீசி