சற்றுப் பின்னமடைந்துள்ளது. பக்கத்தில் உள்ள தீர்த்தம் - சக்கரத் தீர்த்தம். பயன்படுத்தப்படும் நிலையில் இல்லை. உள் சுற்றுப் பிரகாரம் செடிகளடர்ந்துள்ளது. உயரமான பீடத்தின்மீது பலிபீடம் கவசமிட்ட கொடிமரம், நந்தி முதலியவை தனித்தனியே உள்ளன. மேலே சிமெண்டு ஷீட்டுகள் வேயப்பட்ட கொட்டகை போடப்பட்டுள்ளது. அடுத்து உள்ள உள்வாயில், மேற்புறம் பஞ்சமூர்த்திகளின் சுதை வேலைப்பாடுகளுடன் காட்சி தருகின்றது. வெளியில் வலப்பால் அம்பாள் ஆலயமும், அடுத்து யாக சாலையும் உள்ளன. உள் வாயிலுக்கு இரும்புக் கதவு போடப்பட்டுள்ளது. வாயிலின் வெளித் தூண்களில் பசுவொன்று சிவலிங்கத் திருமேனிக்கு பால்சுரந்து வழிபடும் சிற்பமும், மறுபுறம் தண்டபாணி சிற்பமும் உள்ளன. (வாயிலுக்கு வெளியில்) வலப்பால் நவக்கிரக சந்நிதி உள்ளது. வாயிலைக் கடக்கும்போது இடப்பால் நந்தி தேவர் நின்ற கோலத்தில் காட்சி தருவதைத் தரிசிக்கலாம். உள் பிராகார வலத்தில் சூரியன், நால்வர், சோளீஸ்வரர், பஞ்ச மாதாக்கள், பாலகணபதி, உச்சிஷ்ட கணபதி, சிதம்பரேஸ்வரர், கஜலட்சுமி, வள்ளி தெய்வயானை முருகன் ஆகிய சந்நிதிகள் உள்ளன. (ஐப்பசியில் அன்னாபிஷேகம் சிதம்பரேஸ்வரருக்குத்தான் சிறப்பாக நடைபெறுகின்றது.) அடுத்துப் பள்ளியறை உள்ளது. தனியறையாக இல்லை. இரும்புத்தடுப்பு மட்டுமே உள்ளது ; ஊஞ்சல் உள்ளது. அடுத்து வீரபத்திரர், பைரவர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. பிராகார வலம் முடித்து மேலேறும்போது வாயிலின் இருபுறம் துவாரபாலகர்கள் உள்ளனர். ஒருபுறம் வல்லபை விநாயகர் பத்துக் கரங்களுடன் காட்சி தருகின்றார். இது அபூர்வ அமைப்பாகும். மறுபுறம் சண்முகர் உள்ளார். நடுவில் மூலவரைப் பார்த்தவாறு மகா விஷ்ணு கூப்பிய கரங்களுடன் காட்சி தருகின்றார். மேலே விமானம் உள்ளது. அவருக்கு முன் நந்தி உள்ளது. சந்நிதி வாயிலைக் கடந்து மண்டபத்தை அடைகிறோம். கட்டமைப்புடைய மண்படம். இங்குள்ள தூண்களில் தக்ஷிணாமூர்த்தி, சூரியன், மகாவிஷ்ணு, பாலசுப்பிரமணியர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், விநாயகர், முருகன், நான்கு முகங்களும் நன்கு தெரிய பிரம்மா, அம்பாள் வில்வடியில் பெருமானை வழிபடுவது, காளிங்கநர்த்தனம், காமதேனு, பைரவர், வீரபத்திரர், ஒற்றைக் காலில் நின்று தவம் செய்தல், பலவகையான சிம்மங்கள் முதலான பல அரிய சிற்பங்கள் உள்ளன. நடராசர் தெற்கு நோக்கியுள்ளார். எதிரில் வாயில் |