இத்தலம் சைவம், வைணவம் ஆகிய இருசமயங்களின் சிறப்பும் வாய்ந்தது. இங்குள்ள சாரநாதப் பெருமாள் கோயில் மங்களாசாசனம் பெற்றது. மார்க்கண்டேயர், தௌமியமுனிவர் வழிபட்டது. இறைவன் - செந்நெறியப்பர், சாரபரமேஸ்வரர். இறைவி - ஞானவல்லி. தலமரம் - மாவிலங்கை. தீர்த்தம் - மார்க்கண்டேய தீர்த்தம். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. ஊர் பெரியது. செந்நெறியப்பர் கோயிலை மக்கள் வழக்கில் “உடையார் கோயில்” என்று அழைக்கின்றனர். வயல் சூழ்ந்த ‘சேற்றூர்’. இச்சொல் மருவி “சேறை” ஆயிற்று. கிழக்கு நோக்கிய கோயில். எதிரில் ஞானதீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்தால் கொடிமரம் நந்தி பலிபீடங்கள் உள. இரண்டாம் கோபுரம் மூன்று நிலைகளையுடையது. உள்ளே விநாயகர் சந்நிதி, மார்க்கண்டேயர் வழிபட்ட அமுதகடேஸ்வர லிங்கம், அம்பாள் சந்நிதி, சப்தமாதர்கள், நால்வர், முருகன், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி சந்நிதிகளும் உள்ளன. நடராச சபை உள்ளது. கடன் தொல்லையிலிருந்து வழிபடுவோரை விடுபடச் செய்யும் “ரிண விமோசன லிங்கேஸ்வரர்” சந்நிதி விசேஷமானது. பைரவர் சிறந்த பிரார்த்தனாமூர்த்தி. சுவாமி - மூலத்திருமேனி, பெரியபாணம். அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது. அருகிலுள்ள தலங்கள் அரிசிற்கரைப்புத்தூர், திருநறையூர், குடவாசல் முதலியன. |