உணர்ந்து ஞானசம்பந்தர் இத்திருக்கோயிலைத் தெரிந்து கொண்டு வழிபட்டார் என்று சொல்லப்படுகின்றது. இக்குறிப்பே இத்தலத்துப் பதிகத்தில் 3-வது பாட்டில் சொல்லப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அப்பாடல் வருமாறு :- “பாலனாம் விருத்தனாம் பசுபதிதானாம், பண்டுவெங்கூற்றுதைத்து அடியவர்க்கருளும் காலனாம்எனதுரை தனதுரையாகக், கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள் நீலமா மலர்ச்சுனைவண்டு பண்செய்ய, நீர்மலர்க் குவளைகள் தாதுவிண்டோங்கும் ஏல நாறும் பொழில் இலம்பையங் கோட்டூர், இருக்கையாப் பேணி என்எழில் கொள்வதியல்பே.” (சம்பந்தர்) திருவல்லம் பணிந்து இத்தலத்தை அடைந்து பெருமானைத் தனதுரையாற் பாடிப் பரவினார். இறைவன் - அரம்பேஸ்வரர், தெய்வநாயகேஸ்வரர், சந்திரசேகரர். இறைவி - கனககுஜாம்பிகை, கோடேந்து முலையம்மை. தலமரம் - மல்லிகை. தீர்த்தம் - மல்லிகைத் தீர்த்தம். சம்பந்தர் பாடல் பெற்றது. சிறிய கோயில். கூவம் ஆற்றின் மறுகரையில் உள்ளது. ராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. உள்ளே நுழைந்ததும் நேரே மூலவர் காட்சி தருகின்றார். வாயிலைக் கடந்ததும் இடப்பால் அரம்பாபுரிநாதர் - சிவலிங்கத் திருமேனி உள்ளது. வலமாக வரும்போது குருந்த விநாயகர், வள்ளி தெய்வயானை கூடிய முருகன் சந்நிதி, பைரவர் சந்நிதி, சூரியன் சந்நிதி உள்ளன. கோஷ்ட மூர்த்தமாக விநாயகரும் அவரையடுத்து தட்சிணா மூர்த்தியும் உள்ளார்கள். இந்தத் தட்சிணாமூர்த்தி - யோக தட்சிணாமூர்த்தி. சின் முத்திரையை இதயத்தில் வைத்துள்ள அமைப்பு - அற்புதமாகவுள்ளது. கருவறையின் பின்புறம் இலிங்கோற்பவர் இடத்தில் மகாவிஷ்ணு உருவம் உள்ளது. அடுத்து பிரம்மா, துர்க்கை |