பக்கம் எண் :

730 திருமுறைத்தலங்கள்


     உடைய நாயனார்’ என்றும், தியாகேசர் ‘அவனிவிடங்கத் தியாகர்’
என்றும் குறிக்கப்படுகிறார். இக்கோவிலின் வடக்குவீதி ‘திருமறைக்காடன்
திருவீதி’ எனப்படுகிறது.

     இத்திருக்கோயில் தருமையாதீனத்தின் அருளாட்சிக்குட்பட்ட
திருக்கோயிலாகும். நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது. சுவாமி அம்பாளுக்கு
ஏராளமான ஆபரணங்களும் தியாகராஜாவுக்கு வெள்ளி சிம்மாசனமும்
செய்யப்பட்டுள்ளது. 1999 ஜனவரியில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

    
“நாளாய போகாமே நஞ்சணியும் கண்டனுக்கே
     ஆளாய அன்பு செய்வோ மடநெஞ்சே அரன்நாமம்
     கேளாய நம் கிளை கிளைக்கும் கேடுபடாத் திறமருளிக்
     கோளாய நீக்குமவன் கோளிலி யெம்பெருமானே.”    (சம்பந்தர்)

     “ஆவின் பால்கண்டள விலருந்தவப்
     பாலன் வேண்டலும் செல்லென்று பாற்கடல்
     கூவினான் குளிரும் பொழிற் கோளிலி
     மேவினானைத் தொழவினை வீடுமே."           (அப்பர்)

     “நீளநினைந்தடியேன் உமைநித்தலும் கைதொழுவேன்
     வாளன கண்மடவாள் அவள் வாடிவருந்தாமே
     கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்
     ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே."  (சுந்தரர்)

     “கோளிலியப்பர் குணமூன்று டையார் தம்
     தோளிலுலாமாலை சூட்டுதற்கு - வாளவுணன்
     கற்பக வேல் தொட்ட கடவுட்கு முன்வந்த
     கற்பகத்தின் பொற்கழல்கள் காப்பு.”
     (திருக்குவளை தியாகராஜசுவாமி உலா- விநாயகவணக்கம்.)

                                  - “நெற்சுமக்க
     ஆளிலை என்று ஆரூரனார் துதிக்கத் தந்தருளுங்
     கோளிலியின் அன்பர் குலங்கொள் உவப்பே.”      (அருட்பா)

அஞ்சல் முகவரி:-
    
    
அ/மி. கோளிலி நாதேஸ்வரர் திருக்கோயில்
     திருக்குவளை & அஞ்சல் 610 204
     திருவாரூர் வட்டம் - மாவட்டம்.