கண்டு கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது. இப்பெருமானுக்கு உச்சிக்கால அபிஷேகம் நடைபெறுவது பற்றிய அரிய செய்தி வருமாறு : கடம்பத்தூர் புகைவண்டி நிலையத்திற்கு அருகிலுள்ள ‘பிஞ்சிவாக்கம்’ கிராமத்திலிருந்து வேளாளர்கள் தர, ஆயர் ஒருவர் நாடொறும் சுவாமிக்கு உச்சிக்கால அபிஷேகத்திற்குப் பால் கொண்டு வருகின்றார். அவர் அப்பாலை, வரும் வழியில் கீழே வைக்காமல், பயபக்தியுடன் கொண்டு வருகின்றார். அவருக்கு அதற்காக அவ்வூரில் நிலம் மான்யமாக தரப்பட்டுள்ளது. கோயிலிலும் நாடொறும் அவருக்கு சுவாமிக்குப் படைத்த பிரசாதம் (அன்னம்) தரப்படுகிறது. இந்தப் பால் அன்றாடம் வந்த பிறகே ‘உச்சிக்கால அபிஷேகம்’ கோயிலில் செய்யப்படுகிறது. தொன்றுதொட்டு இன்றுவரை ஒரு நாளும் தடங்கலின்றி இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சுவாமிக்கு வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. இந்த அம்பாள் ‘ஆதி தம்பதி’ என்று விசேஷமாகச் சொல்லப்படுகின்றது. கிழக்கு நோக்கிய சந்நிதி. நின்ற நிலை. இம்மண்டபத்தில் பள்ளியறையும், நவக்கிரக சந்நிதியும் உள்ளன. பள்ளியறை அமுதுபடிக்கெனத் தனியே கட்டளைகள் உள்ளனவாம். சுவாமி, அம்பாளுக்கு முன்னால் தனித்தனியே செப்புக்கவசமிட்ட கொடிமரங்கள் உள்ளன. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் துவஜா ரோகண (நான்கு கால்) மண்டபம் உள்ளது. ஆலயத்தில் நான்கு கால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. இக்கோயிலில் சுவாமிக்குச் செய்யப்படும் அபிஷேக நடைமுறைகள் அனைத்தும் மிகவும் ஆசாரமான முறையில் செய்யப்படுகிறது. அவ்வாறே செய்யவேண்டுமென்றும், அதில் தவறு நேரின் தண்டிக்கப்படுவர் என்னும் நம்பிக்கையும் உள்ளது. இவ்வூருக்குக் ‘கூபாக்னபுரி’ என்றும் பெயர் சொல்லப்படுகிறது. கோயிலுக்கு எதிரில் உள்ள நிலங்களும் ‘குமார வட்டம்’ என்று முருகன் பெயரால் வழங்கப்படுகின்றன. கோயிலுக்கு வெளியே - திரிபுர சம்ஹார காலத்தில் தேர் அச்சு முறிந்திட, உடனே பெருமானை விடையாக இருந்து தாங்கியதாகச் சொல்லப்படும் - கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் உள்ளது. |