வேலைப்பாடுகள் மிக்க கருவறை. பிராகாரத்தில் அறுபத்து மூவர் சந்நிதிகள். பாலகணபதி, தட்சிணாமூர்த்தியைத் தொழுது வணங்க உள்ளம் சாந்தியுறும். ஏடகநாதர், ஏலவார்குழலி ஆறுமுக சுவாமி, கணபதி, சோமாஸ்கந்தர், ஞானசம்பந்தர் உற்சவத் திருமேனிகள் உள்ளன. இலிங்கோற்பவர், பஞ்சலிங்கங்கள் தரிசனம். ஆறுமுகப் பெருமானைத் தரிசித்துக் கிழக்கில் திரும்பினால் சப்தமாதாக்கள், இரட்டை விநாயகர் சுப்பிரமணியர், நாகலட்சுமி, துர்க்கை, சக்தி விநாயகர், சண்டேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. ஆடல் வல்ல பெருமானாகிய நடராசர் சந்நிதியில் திருவேடகத் திருப்பதிகம் சலவைக் கற்களில் எழுதப்பட்டுப் பதிக்கப்பட்டுள்ளது. நவக்கிரகங்கள், வல்லப கணபதி, சாஸ்தா, சந்திரன், கார்த்திகை ஆகியோர் சந்நிதிகள் உள. அம்பாள் கோயில் தனியே உள்ளது. தலைவாயிலில் உள்ள ‘மணி’ மலாயாவிலிருந்து வரவழைக்கப்பட்டதாகும். சண்டிகேஸ்வரி சந்நிதியும், பள்ளியறை தரிசனமும் முடித்துத் திரும்பும்போது ஒருவித மனநிறைவு. பள்ளியறையில் கண்ணாடி வாசலில் அம்மையப்பரைக் காண்பதே தனியழகு. இத்தலத்து உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் நீராடி, இறைவனை வழிபடின் ‘சித்தப்பிரமை’ நீங்குவது இத்தலத்தின் தனிப் பெருமையாகும். அம்பாள் கோயிலில் கற்றூணில் ஞானசம்பந்தரின் அழகான சிற்பம் சின்முத்திரையுடன், தலைமாலையுடன் (கைத்தாளமின்றி) காட்சி தருகின்றது. நாடொறும் பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. ஏடு எதிரேறிய விழா ஆவணி முதல் நாளில் நடைபெறுகிறது. கந்த சஷ்டி, நவராத்திரி, ஆடிப்பூரம், மாசிமகக் கடலாட்டு, சிவராத்திரி, பங்குனி உத்திரம் முதலிய உற்சவங்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. கார்த்திகைச் சோமவார 108 சங்காபிஷேகம் சிறப்பானது. தலபுராணம் உள்ளது. கல்வெட்டில் இத்தலம் “பாகனூர்க் கொற்றத்து திருவேடகம்” என்றும் இறைவன் பெயர் திருவேடகம் உடைய நாயனார் என்றும் குறிக்கப் பட்டுள்ளது. “ஏலமார் தருகுழல் ஏழையோ டெழில் பெறும் கோலமார் தருவிடைக் குழகனார் உறைவிடம் சாலமா தவிகளுஞ் சந்தனஞ் சண்பகம் சீலமார் ஏடகஞ் சேர் தலாஞ் செல்வமே.” (சம்பந்தர்) |