தொண்டை நாட்டுத் தலம். சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் செல்லும் பேருந்துப் பாதையில் இத்தலம் உள்ளது. சென்னையிலிருந்து திருவள்ளூர் அரக்கோணம் வழியாகச் சோளிங்கர் செல்லும் பேருந்தும் இவ்வூர் வழியாகச் செல்கிறது. காஞ்சியிலிருந்தும், அரக்கோணத்திலிருந்தும், திருவள்ளூரிலிருந்தும் இவ்வூர்க்குப் பேருந்துகள் உள்ளன. ஆலங்காடு. இத்தலம் ‘வடாரண்யம்’ எனப் பெயர் பெற்றது. காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்து நடராசப் பெருமானின் திருவடிக் கீழிருந்து சிவானந்த இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் தலம். இறைவன் காளியுடன் நடனமாடிய தலம். இத்திருக்கோயில் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்தது, நடராசப் பெருமானின் ஊர்த்துவ தாண்டவத் தலமாகவும், பஞ்ச சபைகளுள் இரத்தின சபையாகவும் சிறப்புற்றிலங்குவது இத்திருக்கோயில். கார்க்கோடகன், சுநந்த முனிவர் முதலியோர் வழிபட்ட தலம். சிறிய ஊர். பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் செல்லும்போது கோயிலுக்குரிய அழகிய சிற்ப வேலைப்பாடு |