பகுதிகளாகவுள்ளது. இவற்றுள் ‘கோட்டை’ எனும் பகுதியில் திருக்கோயில் உள்ளது. குலசேகர பாண்டியன் இந்நகரில் முடிசூட்டிக் கொண்ட விழாவில் நெற்கதிரை முடியாகச் சூடிக்கொண்டான். எனவே இத்தலத்திற்கு நெல்முடிக்கரை என்ற பெயருண்டாயிற்று. வேறு பெயர்கள் :- புஷ்பவனகாசி, பிதுர்மோக்ஷபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரமபுரம், ரசவாதபுரம் என்பன. பொன்னனையாள் என்பவள் வாழ்ந்து சிவனடியார்களை உபசரித்த தலம். இவளுக்காக இறைவன் மகிழ்ந்து இரசவாதம் செய்த திருவிளையாடல் இத்தலத்தில் நிகழ்ந்ததே. இக்கோயிலில் உள்ள கொடுங்கைகள் மிகவும் அழகானவை. பிரமன் வழிபட்ட பதி. வைகைக்கரையில் கோயில். இங்கு வைகையாறு வடக்கு நோக்கி - உத்தரவாகினியாகப் பாய்கிறது. எனவே இவ்விடம் மிகவும் விசேஷமானதாகும். இறந்தோரின் எலும்புகளை இங்குப் புதைப்பதால் அவர்கள் மேலான நற்கதியைப் பெறுகிறார்கள் என்பது மரபு. மூவர் பெருமக்களுக்கும் வைகை மணல் சிவலிங்கமாகத் தோன்றியமையால் மூவரும் மறுகரையிலிருந்தே - இத்தலத்தை மிதிக்க அஞ்சி- வணங்க, இறைவன் அவர்கள் தம்மை நேரே கண்டு வணங்குவதற்கு ஏதுவாக நந்தியை விலகச் செய்தருளினார் என்பது வரலாறு. இதனால் நந்தி சாய்ந்துள்ளதைக் காணலாம். வைகையின் மறுகரையிலிருந்து அவர்கள் தொழுத இடம் மூவர் மண்டபம் என்று வழங்குகிறது. (பழைய மண்டபம்) திருவாசகத்திலும், கருவூர்த்தேவரின் திருவிசைப்பாவிலும் இத்தலம் புகழப்படுகிறது. இறைவன் - புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர் இறைவி - சௌந்தரநாயகி, மின்னனையாள் தலமரம் - பலா மூவர் பாடல் பெற்றது. இங்குள்ள நடராசமூர்த்தம் அற்புதமான வேலைப்பாடுடையது- பெரியது - அழகு மிக்கது. மூலவர் - சிவலிங்கத் திருமேனி - நிறைவான தரிசனம். அழகான மூர்த்தம். பொன்னனையாள் என்னும் ஒருத்திக்காக இறைவன் சித்தராக வந்து இரசவாதம் செய்து பொன் கொடுக்க, அவள் அதனால் சிவலிங்கம் அமைத்து, வழிபட, அது மிகவும் அழகாயிருப்பதைக் கண்டு ஆசையுடன் அத்திருமேனியை - சிவலிங்கத்தைக் கிள்ளி முத்தமிட்டாளாம். இவ்வாறு கிள்ளிய அடையாளம் சிவலிங்கத்தில் உள்ளதை இன்றும் காணலாம். கோயிலில் பொன்னனையாள், சித்தர் ஆகியோர் உருவங்கள் உள்ளன. |