நவக்கிரக மண்டபம், மகா மண்டபம் போன்ற மண்டபங்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன. மூன்று தெப்பக் குளங்கள் இக்கோயிலில் உள்ளன. சுவாமிக்கு நான்கு ராஜகோபுரங்களும் அம்பாளுக்கு ஒரு கோபுரமும் உள்ளன. சுவாமி, அம்பாள் ஆகிய இரு சந்நிதிகளும் கிழக்கு நோக்கியவை. நந்தி பெரியது - சுதையாலானது சுவாமி. சந்நிதிக்குச் செல்லும் வழியில் இசைத் தூண்கள் உள்ளன. துவாரபாலகர்களைக் கடந்து மகா கணபதி, முருகன் சந்நிதிகளைத் தரிசித்து உட்புகுந்தால் சுவாமி சந்நிதி மிகவும் விசாலமானது. நெல்லையப்பர் - சிவலிங்கத் திருமேனி, மேற்புறம் வெட்டப்பட்ட அடையாளம் உள்ளது. இப்போதுள்ளது 21-ஆவது ஆவுடையார் என்றும் 20 ஆவுடையார்கள் பூமியின் கீழ் உள்ளன என்றும் சொல்லப்படுகிறது. இம்மூர்த்தி ‘மிருத்யஞ்சமூர்த்தி’ ஆவார். அன்வர்கான் என்ற இஸ்லாமியரின் மனைவிக்கு உண்டான வயிற்றுவலி நீங்காமையால் அவன் வழிபட்டுப் பேறு பெற்ற சிவலிங்கம் ‘அனவரத லிங்கம்’ என்று வழங்கப்படுகிறது. இதற்கு அவர் தந்துள்ள நகை முதலியவைகளும் உள்ளன. நாள்தோறும் ஆறுகால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. இவற்றுள் உச்சிக்காலத்தில் மட்டும் காந்திமதி அம்பிகையே - இறைவியே நேரில் வந்து சுவாமியை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். அகத்தியருக்கு இறைவன் கல்யாண காட்சியைக் காட்டி அருளிய தலமிதுவே. சுவாமிக்குப் பக்கத்தில் கோவிந்தராஜர் சந்நிதி உள்ளது. இங்குள்ள உற்சவத் திருமேனி கையில் தாரை வார்த்துத் தரும் பாத்திரத்துடன் இருப்பதைக் காணலாம். திருமால் பார்வதியைத் தாரை வார்த்துத் தர இறைவன் மணந்து கொள்ளும் நிகழ்ச்சியை இது நினைவூட்டுகிறது. திருமாலின் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது. இன்றும் ஐப்பசியில் நடைபெறும் திருக்கல்யாண விழாவில் ஒருநாள் வைணவர் வந்து தாரை வார்த்துத் தர, சிவாசாரியார் பெற்றுக் கொள்ளும் ஐதீகம் நடைபெறுகின்றது. சுவாமி பிராகாரத்தில் கன்னி விநாயகர், நந்தி தேவர், பாண்டியராஜா சந்நிதிகள் உள்ளன. பிட்சாடனர், ரிஷிபத்தினியர் உருவங்கள் கல்லில் வண்ணந் தீட்டப்பட்டுள்ளன. அகத்தியர் பிரதிஷ்டை செய்த சால்வடீஸ்வரர், சிவலிங்கத் திருமேனி சற்றுத் தாழ்வில் உள்ளது. இத்தலம், பஞ்ச சபைகளுள் தாமிரச் சபையாகும். இச்சபை தனியே உள்ளது. இங்குள்ள நடராசர் |