வடைமாலை அணிவிப்பது விசேஷமான பிரார்த்தனையாம். நடராசர் சந்நிதி உள்ளது. கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு கி.மீ. தூரத்தில் முதலையுண்ட பாலனை மீட்ட ஏரியும், கரையில் சுந்தரர் சந்நிதியும் உள்ளன. அம்பாள் சந்நிதியில் சுவரில் தேள் உருவம் உள்ளது. இப்பகுதியில் தேள் கடித்தால், அவர்கள் இங்கு வந்து வலம் வந்தால் விஷம் இறங்கி விடும் என்ற நம்பிக்கை உள்ளது. விசேஷ காலங்களில் சுற்றுப்புறக் கிராம மக்கள் இங்கு வந்து தீர்த்தம் எடுத்துச் செல்கிறார்கள். இவ்வூர்த் தேர் சிறப்புடையது. கோயிலுள் காசிக்கிணறும், நாககன்னிகைத் தீர்த்தமும் ஐராவதத் தீர்த்தமும் உள்ளன. திருவாசகத்தில் ஆனந்தமாலையில் “அரிய பொருளே அவிநாசியப்பா பாண்டி வெள்ளமே” என்று பாடுகிறார். அப்பரும் திருத்தாண்டகத்தில் ‘அவிநாசி கண்டாய், அண்டத்தான் கண்டாய்’ எனப் பாடுகிறார். அருணகிரிநாதர் “அவிநாசிப் பெருமாளே”, “புக்கொளியூருடையார் புகழ் தம்பிரானே” என்று பலவிடங்களில் பாடியுள்ளார். இத்தலத்துத் தலபுராணம் இளையான்கவிராயரால் இயற்றப்பட்டது - கிடைக்கிறது. மற்றும் கருணாம்பிகைசதகம், கருணாம்பிகை யமக அந்தாதி, கருணாம்பிகை பிள்ளைத்தமிழும் உள்ளன. 1695-ல் வாழ்ந்த சிக்கதேவராய உடையார் காலத்திய கல்வெட்டுக்கள் சுற்றுப்புற மண்டபச் சுவர்களிலும், சந்நிதித்தூண்களிலும் உள்ளன. இத்தலத்திற்குப் பக்கத்தில் உள்ள சேவூரும், மொக்கணீசுரரும் வைப்புத்தலங்கள். புதிதாக ஏழுநிலை ராஜகோபுரம் கட்டப் பெற்றுள்ளது. அம்பாளுக்கும் புதிய ராஜகோபுரம் ஐந்து நிலைகளில் கட்டப்பட்டு வருகின்றது. இக்கோயிலின் மிகப்பெரிய தேர் அண்மையில் தீவிபத்தில் எரிந்து போய் விட்டது. இக்குறையை ஈடு செய்யும் வகையில் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் கௌமார சுவாமிகள் மடாலயம் தவத்திரு. சுந்தர சுவாமிகள் அவர்களின் தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுச் செய்யப்பட்டுள்ளது. “எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே உற்றாய் என்றுன்னையே உள்குகின்றேன் உணர்ந்துள்ளத்தால் புற்றாடரவா புக்கொளியூர் அவிநாசியே பற்றாக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே.” . “உரைப்பாருரையுகந்துள்க வல்லார் தங்கள் உச்சியாய் அரைக்காடரவா ஆதியும் அந்தமும் ஆயினாய் புரைக்காடு சோலைப்புக் கொளியூர் அவிநாசியே கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே” |