273/1. திருக்கோணமலை ஈழநாட்டுத்தலம் | திருக்கோணேஸ்வரம் கிழக்கு மாநிலத்தில் உள்ளது. திருக்கோணமலை என்னும் பெயரால் பழைய மாவட்டம் நிலவுகிறது. திருக்கோணேஸ்வரத்துக்கு இரயில் மூலம் கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் போகலாம். பேருந்து மூலமும் போவதற்கு வசதியுண்டு. திருக்கோணமலை இரயில் நிலையத்திலிருந்து திருக்கோயிலுக்கு நடந்து போகலாம். திருக்கோணமலை யன்பர்கள் உள்ளன்போடு விருந்து கொடுப்பார்கள். பிரதான வீதியில் சிவயோக சமாஜம், இந்து இளைஞர் பேரவை, அப்பால் தொண்டர் சண்முகராசா அவர்களின் திருநெறிக்கழகம் விருந்தினரை விரைந்தேற்கும். உலகப்புகழ் பெற்ற திருக்கோணமலை மாவட்டத்தில் அறுபதுக்கும் அதிகமான சைவக்கோயில்கள் உள்ளன. இயற்கையாய் அமைந்த பாதுகாப்பான பெரிய துறைமுகம் இங்கே உண்டு. சைவம் கமழும் தமிழ்த் திருநாமங்கள் தாங்கிய பழைய ஊர்களில் இங்கே செந்நெல்லும் கரும்பும் தென்னையும் செழித்து வளருகின்றன. மிகப்பழைய காலத்து, இதிகாச நிகழ்ச்சிகள் இங்கே நடைபெற்றன என்பதற்கு நிரம்பிய ஆதாரங்களோ நிறைய உண்டு. குளக்கோட்டு மன்னன் செய்த தொண்டுகள் பலவற்றின் சுவடுகள் இன்றும் அறியக் கூடியனவாயுள்ளன. கோயில்களை மையமாகக் கொண்டெழுந்த குடியேற்றங்கள் இங்கே உள்ளன. கோவிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோண மாமலை அமர்ந்தாரே எனத் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அற்புதமாகத் திருப்பதிகம் பாடியருளித் தோத்திரஞ் செய்துள்ளார். திருக்கோணேஸ்வரப் பெருமானின் அருளாட்சி நடைறெும் வகையில் மக்கள் வாழ்கின்றார்கள். எங்கு நோக்கினாலும் சைவத் தமிழ்ப் பெயர்களே இங்குக் கேட்கின்றன. இன்றைக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே திருக்கோணேஸ்வரம் தேவாரம் பெற்ற திருத்தலமாக ஒளிவீசியது. சோழ மன்னர்களும் தங்கள் புகழ் நிலவுமாறு இத்திருக்கோயிலில் நற்பணி புரிந்துள்ளார்கள். பாண்டியன் திருக்கோண மலையில் இணைக்கயல் பொறித்துள்ளமை வரலாற்றுப் பெருமையாகும். திருக்கோணேஸ்வரம் இலங்கைக்குப் பெருமைதரும் வெற்றியைச் சேக்கிழார் சுவாமிகள் “ஆழிபுடைசூழ்ந்தொலிக்கும் ஈழந்தன்னில் |