இக்கோயிலில் கலாத்வா, தத்துவாத்வா, புவனாத்வா, வர்ணாத்வா, பதாத்வா, மந்திராத்வா முதலிய ஆறு ஆத்வாக்களைக் குறிக்கும் வகையில் ஆறுவாயில்கள் - ஆறுசபைகள் உள்ளன. அவை 1) கனக சபை 2) நடன சபை 3) தேவசபை 4) சத்சபை 5) சித்சபை 6) ஆநந்த சபை என்றழைக்கப் படுகின்றன. (கனகசபை - 81 தீபங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நர்த்தன சபை (நடன/நிருத்தசபை) - பதஞ்சலி வியாக்ரபாதர்கள் பெருமானிடம் கருணையை வேண்டிப் பெற்ற இடம் 224 புவன தீபங்களையுடையது. சூரனிடம் பயந்த தேவர்கள் தவஞ்செய்த இடமாகச் சொல்லப்படுவது தேவசபை - சுந்தர பாண்டிய மண்டபம் என்பர். இங்கு ஏகாதச மந்திரங்கள் 11 தீபங்களாக உள்ளன. சத்சபையில் 36 எண்ணுடைய தத்துவத் தீபங்கள் பிரகாசிக்கின்றன. சித்சபையில் அகரமுதலான 51 எண்ணுடைய தீபம் திகழ்கிறது. ஆநந்தசபையில் (கருவறையில்) பஞ்சகலைகள் என்னும் சுடர், பிரகாசிக்கிறது. இவ்வாறு இத்திருக்கோயிலில் தத்துவம் அனைத்தும் தீப வடிவங்களாகவே வைத்துக் காட்டப்பட்டுள்ளன. இக்கருத்தை மனத்துக் கொண்டு உட்செல்வோம்.) 1. இப்போது நாமிருப்பது பஞ்சாட்சர மண்டபம் - இதை கனகசபை என்பர். முந்நூறு ஆண்டுகட்கு முன் கட்டப்பட்டதாம். கொடுங்கைகளை அழகாகப் பெற்றுள்ள இம்மண்டபத்தின் மேற்புறச் சுவரில் எண்ணற்ற புவனங்களைக் குறிக்கும் அட்சரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆத்மநாதர், தம்மை வழிபட்டு வந்த அந்தணர்களுக்காக, பூமியில் (கீழ்) நீர் வெட்டிக் காட்டிய திருவிளையாடலைக் குறிக்கும் சிற்பம் உள்ளது. பாண்டியன் விசாரிக்க, அமைச்சன் நிற்க, பக்கத்தில் கீழ்நிரை வெட்டிக் காட்டியவராக - குதிரைச் சாமியாராகக் காட்சி தரும் கோலத்தை இம்மண்டபத்தில் காணலாம். (இவ்வரலாறு இக்குறிப்பின் கடைசியில் தரப்பட்டுள்ளது.) இவ்வரலாற்றுச் செய்தியைக் கவிக்குஞ்சர பாரதியார் ; “வனமான கைலைக்கு நிகராக சதுர்வேத மங்களம் இருந்த லிங்கம் கங்கை பங்காளராய் வேதியர்க் காகவே காணி பறிகொண்ட லிங்கம்.” என்று பாடியுள்ளார். இதையே பின்வரும் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணப் பாடலும் தெரிவிக்கின்றது:- |