| என்பது இக்கோயில் மரபு. விநாயகர், வீரபத்திரர், பிட்சாடனர், ஊர்த்துவர் மூர்த்தங்களைத் தரிசித்தவாறே அம்பிகை சந்நிதியை அடைகிறோம். சுவாமியைப் போலவே அம்பாளும் தெற்கு நோக்கிய சந்நிதி, ஆத்மநாத சுவாமியைப் போலவே அம்பாளும் அருவம்தான். ஸ்ரீயோகாம்பாள் சந்நிதியில் திருமேனி இல்லை. சததளபத்ம பீடத்தில் - 100 இதழ்கள் கொண்ட தாமரையாகிய பீடத்தில் - யோகாம்பாளின் திருவடிகள் மட்டுமே தங்கத்தாலான யந்திர வடிவமாக உள்ளன. முன்புறமுள்ள கல் ஜன்னல் வழியாகத்தான் தரிசிக்க வேண்டும். அதற்கேற்ப ஒளி பொருத்தப்பட்டுள்ளது. பூஜை செய்வோர் மட்டும் உள்ளே செல்வதற்குப் பக்கவாயில் உள்ளது. யோக சொரூபியைத் தரிசித்து விட்டு வலமாக வரும்போது சுவரில் உள்ள சிவபுராணத்தையும் திருவாசகப் பாடற் பகுதிகளையும் படித்தவாறே வலம் வரலாம். அடுத்த தரிசனம் தல விசேடக் காட்சியான குருந்தமர உபதேசக் காட்சி. கல்லில் வடித்துள்ள குருந்தமரம் - கீழே இறைவன் குரு வடிவில் அமர்ந்திருக்க எதிரில் மாணிக்கவாசகர் பவ்வியமாக இருந்து உபதேசம் பெறும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. ஆனித் திருமஞ்சன நாளிலும் மார்கழித் திருவாதிரையிலும் மாணிக்கவாசகருக்கு உபதேசித்த காட்சி உற்சவம் நடைபெறுகிறது. அப்போது பூஜை செய்யும் நம்பியார் சிவ வேடமணிந்து, மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து உபதேச ஐதிகத்தை நடத்து விக்கின்றார். “எந்தமராம் இவன் என்று என்னையும் ஆட்கொண்டருளும்” என்ற திருவாசகத்தை நினைவிருத்திக் தொழுது நகர்ந்தால், திருவாசகக் கோயிலைக் காணலாம். இங்குத் திருவாசக ஓலைச்சுவடியே இருப்பது விசேடம். நடராசர் சந்நிதி மூலமூர்த்தமாக (கற்சிலையில்) அம்பலவாணர் - ஆனந்தக் காட்சி. பாலசுப்பிரமணியரை வணங்கி, வலம் முடித்து, வாயிலைக் கடந்து உள்ளே செல்கிறோம். மேற்பகுதியில் “நிலம் நீர் நெருப்பு” என்று தொடங்கும் திருவாசகத் தோணோக்கப் பாடல் எழுதப்பட்டு, அதற்குரிய உருவங்களும் உள்ளன. 4. அடுத்த சபை, சத்சபை, இங்குள்ள விசாலமான கல்மேடையில்தான் சுவாமிக்குக் கைபடாத அன்னம் நிவேதிக்கப்படுகிறது. இதனால் இதற்கு அமுத மண்டபம் என்று பெயர். 5. சித்சபை அடுத்துள்ளது. பூஜை செய்வோர் நிற்குமிடம். ஐந்து (பஞ்ச) கலைகள் தீபங்களாகக் காட்சி நல்குமிடம். 6. ஆனந்த மயமான ஆத்மநாதரை நேரே காண்கிறோம். பரம சுவாமியான ஆத்மநாதர் எழுந்தருளியுள்ள கருவறையே - குருவருள் கொலு வீற்றிருக்குமிடமே ஆநந்த சபை. |